வடகிழக்கு பருவமழை.. வெள்ள பாதிப்பை தடுக்க என்ன செய்யலாம்? செப்.26ல் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதையடுத்து, அதை எதிர் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 26ஆம் தேதி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இதில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில், சென்னையில் பெருமழை பெய்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. குடியிருப்புகள் தண்ணீரில் மூழ்கியதால் ஏராளமானோர் திண்டாடிப்போயினர்.
கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவான புயல்கள் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தின. ஒவ்வொரு ஆண்டிலும் சென்னையில் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதும் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பது ஏற்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பருவமழை காலம்
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. அபரிமிதமாக பெய்த பருவமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அணைகள் நிரம்பி வழிகின்றன. தென்மேற்குப் பருவமழை காலம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த நிலையில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

வெள்ளம் சூழ்ந்த சென்னை
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னை புறநகர் மட்டுமல்லாது நகர் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனையடுத்து சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர்நிலைகள், நீர்வழித் தடங்கள், ஆறுகள் போன்றவற்றில் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டு வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதுபோல் இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில் 47 சதவீதம் மழை கிடைக்கிறது. இதில் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர் அதிகாரிகளுடன் வரும் 26ஆம் தேதியன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அனைத்து துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்பார்கள்.

முதல்வர் அறிவுரை
இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் சவால்களை திறம்பட கையாளுவது, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள், மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications