4 முரண்கள்.. ‘மாட்டிக்கிச்சு’.. வைத்தி சொன்னது ஞாபகம் இருக்கா? - பாயிண்டுகளை அடுக்கும் ஓபிஎஸ் டீம்!
சென்னை : தும்பை விட்டு வாலைப் பிடித்து ஐகோர்ட் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், இந்தத் தீர்ப்பில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கின்றன என பாயிண்டுகளை அடுக்குகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
முக்கியமான கோணத்தையே விட்டுவிட்டு, மேலோட்டமாக, ஈபிஎஸ் தரப்பு வாதங்களை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர் நீதிபதிகள் என ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைக்கிறது.
பொதுக்குழு செல்லும் என்பதற்கு நீதிபதிகள் முன்வைத்த ஒரு பாயிண்ட், ஓபிஎஸ் பொதுக்குழு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது. ஆனால் அப்போதே, வைத்திலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதையும், ஓபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பும் செய்ததையும் நீதிபதிகள் கவனிக்கவில்லையா எனக் கேள்வி எழுப்புகிறது ஓபிஎஸ் டீம்.
இதுபோல பல முரண்கள் இருப்பதால், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் நிச்சயமாக தங்களுக்கு சாதகமான தீர்ப்பே வரும் என உறுதியாகக் கூறுகின்றனர்.

தீர்ப்பு ரத்து
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தீர்ப்பளித்தார். எடப்பாடி பழனிசாமி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த அமர்வு ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று நேற்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தது.

பெரிய ஷாக்
இந்த தீர்ப்பின் மூலம், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக, எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார். சரியாக 15 நாட்களில் ஆட்டமே மாறி, ஈபிஎஸ் கைக்குச் சென்றுள்ளது. எல்லாம் சாதகமாகச் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த தீர்ப்பு கொடுத்த அடி ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து, தீர்ப்புக்கு எதிராக நாளை ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.

தீர்ப்பில் என்ன சிக்கல்?
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கும்போது, அவர்கள் இந்தத் தீர்ப்பு முழுக்க முழுக்க சட்ட விதிகளுக்கு எதிரானது, நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்து, ஈபிஎஸ் தரப்பின் வாதங்களையே நீதிபதிகள் தீர்ப்பாக எழுதியுள்ளனர். ஆழமாக எந்தப் பிரச்சனையையும் தொடவில்லை. முக்கியமான கோணத்தையே விட்டுவிட்டனர் என்கிறார்கள்.

தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை
அதாவது, ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறதா காலாவதி ஆகிவிட்டதா என்பது இந்த வழக்கின் ஒரு முக்கியமான பாயிண்ட். அதன் மூலமே, பொதுக்குழு கூட்டப்படலாமா என்பதை நோக்கிச் செல்ல முடியும். தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இந்தப் புள்ளியில் இருந்தே தனது விசாரணையைத் தொடங்கினார். ஆனால், இரு நீதிபதிகளோ இந்த விவாதத்தையே மறந்துவிட்டு தீர்ப்பளித்திருக்கின்றனர், தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்துச் சென்று தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள்.

பொதுக்குழு செல்லாது?
பொதுக்குழு செல்லும் என்பதற்கான காரணமாக, தீர்ப்பில் ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து செயல்படாத நிலையில், அவைத்தலைவர் பொதுக்குழுவைக் கூட்டலாம் என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர்கள் இல்லை என்றால் இது சரி, ஆனால், ஒருங்கிணைப்பாளரே தான் தான் என ஓபிஎஸ் வாதாடும்போது, அந்தப் பதவி இருக்கிறதா இல்லையா என்பதுதான் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம்.

முரண்பட்ட கருத்து
அதை அம்போ என விட்டுவிட்டு, ஒருங்கிணைப்பாளரே இல்லை எனக் கருதி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பதற்காக ஓபிஎஸ் பதவியும் இல்லை என்றாகிவிடாது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதா என்பதை பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

இரண்டு பதவிகளும் இருக்கிறதா?
நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பின்படி பார்த்தால், ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து எந்த முடிவும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் ஒருங்கிணைப்பாளர் பதவியும் இருக்கிறது. பொதுக்குழு செல்லும், அதன் மூலம் இடைக்கால பொதுச் செயலாளராக ஈபிஎஸ் இருக்கிறார். நீதிமன்றம் ஏதாவது ஒரு பதவியைத் தானே இருப்பதாகக் கருத வேண்டும். இப்படி, முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது என்கிறார்கள்.

பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு இல்லையா?
ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஜூலை 11ல் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அந்த அறிவிப்பை போலியானது என்று சொல்ல முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை நீதிபதிகள் கவனிக்கவே இல்லையா என்று தெரியவில்லை.

செல்லாது செல்லாது - வைத்திலிங்கம்
பொதுக்குழு குறித்து ஈபிஎஸ் தரப்பு அறிவித்தபோது, ஓபிஎஸ் உடன் இருந்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அப்போதே எதிர்ப்பு தெரிவித்து 'செல்லாது செல்லாது' என முழங்கிவிட்டுத்தான் வந்தார். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனை எதிர்ப்பாக நீதிமன்றம் கருத வேண்டாமா? என்ற பாயிண்டையும் முன்வைக்கின்றனர்.

பாயிண்ட் எடுக்கும் வக்கீல்கள்
இப்படி தீர்ப்பில் பல இடங்களில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, நடந்த விஷயத்திற்கு நேர்மாறானவை நீதிபதிகளால் கோட் செய்யப்பட்டுள்ளன. எல்லா பாயிண்டுகளையும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பெடுத்து வைத்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில், இதனை விரிவாகவே எடுத்து வைக்க இருக்கிறோம். எங்கள் பக்கம் தான் தீர்ப்பு வரும் என மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.
-
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications