ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. தகவல் கேட்டதும் தேனிக்கு விரைந்த ஓபிஎஸ்! பரபரப்பு
சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து தேனிக்கு விரைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலைத் தொடர்ந்து, தனது அணியில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி வரும் ஓபிஎஸ் வாரம் ஒருமுறையாவது தனது சொந்த ஊருக்குச் சென்று ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசித்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தனது தாயார் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, காரில் தேனிக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் தாயார்
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள். 90 வயதைக் கடந்த இவர் தற்போது தேனி பெரியகுளத்தில் வசித்து வருகிறார். அவருக்கு இன்று பிற்பகலில் திடீரென கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போதுமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் அனுமதி
பல ஆண்டுகளாக தொடர்ந்து உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் பழனியம்மாள் கடந்த வாரம் மதுரையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று பிற்பகலில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் மிகவும் குறைந்ததால் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட ஓபிஎஸ் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்குச் சென்று பழனியம்மாள் உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தாயாரின் உடல் நலக்குறைவு குறித்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு தகவல் சொல்லப்பட்டது.

தேனி விரையும் ஓபிஎஸ்
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து அவசரமாக சாலை மார்க்கமாக தேனிக்கு சென்று கொண்டிருக்கிறார். இன்னும் சற்று நேரத்தில் தேனியில் மருத்துவமனைக்கு வந்து அவரது தாயாரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறிந்து, மருத்துவமனைக்கு அதிமுக ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் வந்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications