முதல்வர் பதவி போட்டியிலிருந்து ஓரம் கட்டப்பட்ட ஓபிஎஸ்! 'உறுதி செய்த' அமைச்சர்கள் பேட்டி
சென்னை: முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்பட்டுவிட்டாரா என்ற கேள்வியை அதிமுக தொண்டர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது அமைச்சர்களின் பேட்டி.
இது தேர்தல் காலம். யார் முதல்வர் என்ற விஷயத்தில் இரண்டில் ஒரு முடிவை எடுத்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் ஒரு முடிவில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த விஷயம் காரசாரமாக விவாதிக்கப்பட்டு எந்த முடிவும் எட்டப்படாமல் கலைந்து போனது.
முதல்வர் வேட்பாளர் விவகாரம்: ஓபிஎஸ்-உடன் அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி. ஆலோசனை
7ம் தேதி அறிவிப்பு
இருந்தாலும் என்ன செய்வது? சசிகலா ரிலீஸ் தேதிக்கு முன்பாக யார் முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்து திமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று தடாலடியாக அறிவித்து விட்டு கலைந்து சென்றது செயற்குழு. சொல்வதை சொல்லியாகி விட்டது. ஆனால் இன்னமும் முடிவெடுப்பதில் குழப்பம் இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான், அரசு விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார் பன்னீர்செல்வம். இந்த நிலையில்தான் சில முக்கியஸ்தர்கள் பன்னீர்செல்வத்தை அவ்வப்போது சந்தித்து பேசி சமாதானம் செய்தபடி இருக்கிறார்கள்.
எடப்பாடியார்தான்
இது ஒரு பக்கம் என்றால், முதல்வர் ஆதரவு அமைச்சர்கள், ஓபிஎஸ் தரப்பை நோக்கி அஸ்திரங்களை வீச ஆரம்பித்து விட்டனர். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அளித்த பேட்டியில், மீண்டும் அதிமுக வெற்றி பெறும். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று தடாலடியாக தெரிவித்தார். 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதாக செயற்குழு முடிவு எடுத்த நிலையில் அமைச்சர் ஒருவர் இப்படி பகிரங்கமாக எடப்பாடிதான் அடுத்த முதல்வர் என கூறினார்.
அடுத்தடுத்த அமைச்சர்கள் பேட்டி
திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கிடையாது. மற்றொரு சீனியர் அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டியில், முதல்வர் போட்டியில் ஓ பன்னீர்செல்வம் இல்லை என்று கூறியுள்ளார். இருவர் பேட்டியின் பின்னாலிருக்கும் அர்த்தம் ஒன்றே ஒன்று தான். அடுத்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதற்கு முடிவு செய்து விட்டோம் என்பதுதான் அந்த செய்தி.
எதிர்க்க ஆளில்லை
7ம் தேதி எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம் என்று சீனியர் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து நழுவிவிட்டார். எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்பது பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால், எப்படி அமைச்சர்கள் இவ்வாறு பேசலாம், பன்னீர்செல்வமும் முதல்வர் ரேஸில் இருக்கிறாரே என்று பன்னீர்செல்வம் தரப்பில் யாருமே பேசவில்லை. தட்டிக் கேட்கவில்லை.
ஓபிஎஸ் நிலைமை
இதிலிருந்து பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார் என்று தெரிகிறது. இவ்வாறு அமைச்சர்களே தொண்டர்களுக்கு க்ளூ கொடுத்துவிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோபம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே தான் முதல்வர் விஷயத்தில், ஓபிஎஸ் கலாட்டா செய்வார் என பல அரசியல் பார்வையாளர்களும் கருதுகிறார்கள். அவரை சமாதானப்படுத்த முடியாமல் திணறும் அதிமுக வரும் 6ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சென்னை வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டது, குழப்பத்தின் முடிவு கிடையாது. குழப்பமே அங்குதான் ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.