பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பேன்.. 23 தீர்மானங்களுக்கு ஒப்புதல்.. நீதிமன்றத்தில் ஓபிஎஸ் பரபர தகவல்
சென்னை : அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்.
நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்று முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது நாளை நடைபெறும் பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அவரது தரப்பினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

23 வரைவு தீர்மானங்கள் ஒருங்கிணைப்பாளரான தனக்கு அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து இமெயில் மூலம் வந்துள்ளதாகவும், அதற்கு இன்று மதியம் தான் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் கொண்டு வரக் கூடாது எனவும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பொதுச் செயலாளர் பதவி இனி இல்லை என கடந்தாண்டு டிசம்பர் மாதம் கூறிவிட்டு இப்போது பொதுச் செயலாளர் பதவியைக் கொண்டு வருவதா? ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. இதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது அதனை திருத்தம் செய்யக் கூடாது என உத்தரவிடவேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
பொதுக்குழுவை வழக்கமான முறையில் நடத்த ஆட்சேபணை இல்லை, பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம், ஆனால் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை எடுத்து வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications