எங்கண்ணே அவர காணோம்? எடப்பாடி அணியிலிருந்து விலகிச் செல்லும் ‘தலைகள்’? வலைவீசும் ஓபிஎஸ் தரப்பு..!
சென்னை : அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே முக்கியத்துவம் வழங்குவதாக புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீது அதிருப்தியில் இருக்கும் சில மூத்த தலைவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டாத நிலையில் அவர்களை வளைக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் அதிகாரப் போட்டி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் மோதல் வெடித்து தற்போது பூதாகரமாக கிளம்பி இருக்கிறது. இனிவரும் காலங்களில் இருவரும் ஒன்று சேர வாய்ப்பில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கின்றனர்.
இரட்டை தலைமை முறை ஒழிக்கப்பட்டு ஒற்றை தலைமை வேண்டும் என்ற குரல் இழந்த போது கட்சியில் தனக்கான செல்வாக்கு குறைந்ததை உணர்ந்து கொண்ட ஓபிஎஸ் தரப்பு திடீரென அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது.
கோவை செல்வராஜ் எந்தக் கட்சி.. அதிமுக என்றால் நாங்கள் தான்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!
அதிமுக பொதுக்குழு கூட்டம்
கடந்த ஜூலை பதினோராம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் தொடங்கிய போது அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அதனை கைப்பற்றியதாக அறிவித்தார் ஓபிஎஸ்.
மேலும் அங்கிருந்து ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்ததோடு புதிய தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து பன்னீர்செல்வம் தரப்பு வெளியிட்டு வருகிறது.
ஓபிஎஸ் நீக்கம்
தற்போது இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதே அதிமுகவினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் நீக்கத்தால் தென் மாவட்டங்களில் குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயத்தின் மத்தியில் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்ற தகவல் எடப்பாடி காதுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அந்த சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொருளாளர் துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதிவுகளை முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் கேபி முனுசாமி ஆகியோருக்கு வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிருப்தி
எதிர்க்கட்சித் தலைவர் பதவியாவது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் பதவியும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. தலைமை நிலைய செயலாளர் பதவி மட்டும் கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கிய எஸ்.பி.வேலுமணிக்கு வழங்கப்பட்டது.
’சில நிர்வாகிகள்’
அதே நேரத்தில் தர்மயுத்தம் பொதுக்குழு கூட்டம் ஆகியவற்றில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு மிக தீவிரமாக ஆதரவளித்து வந்த முன்னாள் அமைச்சர்களான, பொன்னையன், செங்கோட்டையன், ஜெயக்குமார் தங்கமணி, கே சி வீரமணி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு புதிய பதவிகள் ஏதும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அதிமுகவில் தங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து கொடுக்கிறதோ என்ற அதிருப்தியில் இருக்கும் 'சில நிர்வாகிகள்' தற்போது அதிமுகவின் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கு வராமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிருப்தி குரல்
சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கூட பல முக்கிய தலைவர்களை காண முடியவில்லை என்கின்றனர் அதிமுகவினர் கொங்கு மண்டலத்தை எடப்பாடி பழனிச்சாமி தென் மாவட்டங்களுக்காக புறக்கணிக்கிறாரோ என்ற அதிருப்தி குரல் எழுந்துள்ளதாகவும் இந்த தகவல் ஓபிஎஸ் தரப்புக்கு சென்று அவர்கள் தங்கள் தரப்புக்கு வந்தால் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் அதிமுக தலைமை கைப்பற்றியுடன் முக்கிய பதவிகள் வழங்கப்படும் என கூறி அவர்களை இழுக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.