இதென்ன ட்விஸ்ட்டு.. ‘வேலையில் இறங்கிட்டோம்’- எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ் டீம்! அதிமுகவில் பரபர!
சென்னை : அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமி, விரைவில் தேர்தலை அறிவித்து பொதுச் செயலாளர் ஆகலாம் என திட்டமிட்டு வரும் சூழலில், ஓபிஎஸ் தரப்பின் மூவ்கள், ஈபிஎஸ்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பொதுக்குழு வழக்கில் கிடைத்த சாதகமான தீர்ப்பில், நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த முக்கியமான நகர்வு 'பொதுச் செயலாளர்' பதவிக்கான தேர்தலை நடத்துவது தான்.
பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்துவதற்கு ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் மூலம் முட்டுக்கட்டை போடும் என்றுதான் எதிர்பார்த்தார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால், ஓபிஎஸ் தரப்போ, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், தேர்தலில் நின்று ஓ.பன்னீர்செல்வம் வெல்வார் என்றும் பேசத் தொடங்கியிருப்பது ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்துள்ளது.
ஓபிஎஸ் கோஷ்டிக்கு அடிமேல் அடி- ஆபீஸ் சாவி வழக்கிலும் பெரிய செட் பேக்.. அதிமுகவில் எதிர்காலம் அம்போ?
ஈபிஎஸ்ஸின் முயற்சி
நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என ஓபிஎஸ் - ஈபிஎஸ் டிஸ்பியூட் ஒருபுறமிருக்க, கட்சியை தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகி வருகிறார். ஓபிஎஸ் தரப்புக்கு நெருக்கடியை அதிகரிக்கும் வகையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. விரைவில் தேர்தலை அறிவித்து, இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளர் ஆக திட்டமிட்டுள்ளார்.
எடப்பாடி போட்ட கணக்கு
பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட 10 மாசெக்கள் வழிமொழியவும், 10 மாசெக்கள் முன்மொழியவும் வேண்டும் என்பதால், வேறு எவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தவிடக்கூடாது என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாட திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால், ஈபிஎஸ் தரப்பு தேர்தலை அறிவிக்கத் தயாராகும்போது தீவிரமாக இறங்கலாம் என முடிவெடித்ததாக கூறப்பட்டது.
ஷாக் தந்த மூவ்
இது எடப்பாடி பழனிசாமியும் எதிர்பார்த்தது தான். அதனால் தான், பொதுச் செயலாளர் தேர்தலை விரைவில் நடத்தப்போவதாக எடப்பாடியே வெளிப்படையாகவும் பேசி வந்தார். பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர, கட்சியின் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு முகாந்திரம் இல்லை என்ற பாயிண்ட்டை நம் பக்கம் இருக்கிறது என நம்பிக்கையில் இருந்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில் தான் ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் வைக்கும் வகையில் ஓபிஎஸ்ஸின் மூவ்கள் அமைந்திருக்கின்றன.
தேர்தல் நடத்தப் போறோம்
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் இன்று திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒரு முக்கியமான விஷயத்தை வெளிப்படுத்தினர். பொதுச் செயலாளர் தேர்தலுக்கான பணிகளில் நாங்கள் தற்போது ஈடுபட்டு வருகிறோம். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டிக்கு வரட்டும். தொண்டர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
வெற்றி பெறுவோம்
எம்ஜிஆரையோ ஜெயலலிதாவையோ எதிர்த்து நிற்க யாரும் அப்போது இல்லை. அதனால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் ஆனால் அப்படிப்பட்ட வல்லமை படைத்த தலைவர்கள் இப்போது இல்லை. ஆகையால் தேர்தல் மூலமாக தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதிமுகவின் சட்ட விதிகளின்படி தேர்தல் நடைபெற வேண்டும். பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
ட்விஸ்ட் - பின்னணி
பொதுச் செயலாளர் பதவியையே மீண்டும் கொண்டு வரக்கூடாது, அது ஜெயலலிதா மட்டுமே வகிக்கும் பதவி என ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ச்சியாக கூறி வந்த நிலையில், திடீரென ட்விஸ்ட் அடித்து, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறியிருப்பது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதற்குப் பின்னணியில் என்ன பிளான் இருக்கிறது என்பது போகப்போகத் தெரியும்.