டெல்லி பாஜக காற்று தேனி பக்கம் வீசுமா? முட்டி மோத டெல்லிக்கு படையெடுக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!
சென்னை: அதிமுக கட்சி, கொடி, சின்னம் அத்தனையும் இழந்து நிற்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. பாஜகவுக்கு குட்பை சொன்ன குஷியில் புதிய கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

நிர்மலா சீதாராமன் அறிக்கை: தென்னிந்தியாவில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி அதிமுக. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற 2-வது பெரிய கட்சி அதிமுக. அப்படியான அதிமுகவை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் சீண்டல்கள்தான் பாஜக கூட்டணியைவிட்டே விரட்டிவிட்டது... இதனை எப்படி சமாளிப்பது? என தவிக்கிறது டெல்லி பாஜக மேலிடம். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒரு அறிக்கையை வாங்கி இருக்கிறது டெல்லி மேலிடம். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் சென்னை சந்திப்புகளின் கருத்துகளையும் டெல்லி பாஜக கேட்டிருக்கிறது.
அண்ணாமலை விரக்தி: இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை உடனே புறப்பட்டு வர டெல்லி 'சம்மன்' அனுப்பியது. இந்த சம்மன் வந்த வேகம் தமது மாநில தலைவர் பதவியை பறித்துவிடுமோ என்கிற பதற்றத்தை நேற்று செய்தியாளர்கள் சந்திப்புகளில் தாறு மாறாகவும் விரக்தியாகவும் வெளிப்படுத்தினார் அண்ணாமலை.
டெல்லி செல்லும் ஓபிஎஸ்: இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்கும் திட்டத்துடன் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல இருக்கிறாராம். ஆனால் ஜேபி நட்டா, ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க நேரம் ஒதுக்கினாரா? இல்லையா? என்பதில் உறுதியான தகவல் இல்லை.

எந்த 'ஆதரவும்' இல்லாத ஓபிஎஸ்: அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது ஒருசில முன்னாள் அதிமுக தலைவர்களுடன் மட்டும் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் வசம் கட்சி, கொடி, சின்னம், தொண்டர் பலம் என எதுவும் இல்லை. இருந்த போதும் என்னிடம் அதிமுக தொண்டர்கள் இருப்பதாக கூறி வருகிறார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது சொந்த ஜாதியினராகிய முக்குலத்தோர் ஆதரவும் இல்லை என்பது வெளிப்படையானது. இதனால் ஓபிஎஸ்-க்கு டெல்லி பாஜக மேலிடம் முக்கியத்துவம் தராமல் ஒதுக்கிதான் வைத்திருக்கிறது. தற்போதைய நிலையில் இழந்த முக்கியத்துவத்தை பெறுவதற்கான முயற்சியாக ஓபிஎஸ் டெல்லி செல்லக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பாஜக நிலைப்பாடு: ஆனால் பாஜக வட்டாரங்களைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியின் அதிமுக இல்லாத நிலையில் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரைத்தான் முதலில் கூட்டணியில் இடம் பெறச் செய்யும்; 3-வதாகவே ஓ.பன்னீர்செல்வம் போனால் போகட்டும் என இருக்கச் செய்யும் என்பதுதான் நிலைப்பாடு என்கின்றனர். முட்டி மோதட்டும்!












Click it and Unblock the Notifications