அடி மடியிலேயே கை வைக்கும் ஓபிஎஸ்! இப்போதைக்கு ‘இது தான்’ முக்கியம்! ஓபிஎஸ் கையிலெடுக்கும் அஸ்திரம்!
சென்னை : அதிமுகவில் பொதுக்குழு வரை தனது அஸ்திரங்கள் அனைத்தும் வீணான நிலையில் தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பு மூலம் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பதை விட வேறு ஒரு முக்கிய திட்டத்தை கையில் எடுத்துள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் தேனி ஆதரவாளர்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நடைபெற்று வரும் அதிகார மோதல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது என புலம்புகின்றனர் அந்த கட்சியில் நீண்ட காலமாக பயணிக்கும் அடிமட்ட தொண்டர்கள்.
முதலில் சசிகலா, பிறகு டிடிவி தினகரன், தற்போது எடப்பாடி பழனிச்சாமி, நீண்ட காலமாகவே ஓ பன்னீர்செல்வம் என ஆளுக்கு ஒரு மூலையில் நின்று கொண்டு அதிமுகவில் அதிகார யுத்தம் நடத்தி வருகின்றனர்.

அதிகார யுத்தம்
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக இப்படி உட்கட்சி விவகாரங்களில் அடிக்கடி சிக்கிக் கொள்வதால் தீவிர அரசியலில் ஆர்வம் காட்ட முடியாமல் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யவே போராடி வருகிறது. இதனால் தமிழகத்தில் நான்கு எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கும் பாஜக தாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி எனக்கூறி பல்வேறு விவகாரங்களை கிளப்பி வருகிறது. இது அதிமுகவை பொருத்தவரை ஒரு பின்னடைவான விஷயம் என்பதை அதிமுக தலைவர்கள் உணர்ந்தே இருந்தாலும், ஆனால் அதைவிட அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம்
இதற்காக நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என பல இடங்களில் விசாரணை இருக்கிறது. இந்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இவ்வளவு நாட்களாக இருந்த ஆதரவாளர்களில் ஒவ்வொருவராக ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வந்துள்ளார். இதை அடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் விரைவில் சசிகலா டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்க இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி
தற்போதைய சூழலில் அவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்திருந்தாலும் தற்போதைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுப்பதிலேயே அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இரட்டை இலை தன் வசம் இருக்கும் ஆர்வத்தில் தான் எடப்பாடி பழனிச்சாமி தன்னை மதிக்கவில்லை என கருதும் ஓ.பன்னீர்செல்வம் அதனை தனது தரப்புக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதாவது 50க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால்தான் தற்போது எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராகவும் இரட்டை இலை சின்னத்தை கையில் வைத்திருப்பவராகவும் கருதப்படுகிறார்.

இரட்டை இலை
தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு குறைந்தபட்சம் 15 எம்எல்ஏக்களை இழுத்து விட்டால் எடப்பாடி பழனிச்சாமி காண எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கான அங்கீகாரம் கிடைக்காது மேலும் இரட்டை இலையை தங்களுக்கு சொந்தமானது என தேர்தல் ஆணையம் நீதிமன்றம் செல்வதற்கும் வசதியாக இருக்கும் என்பதால் அதற்கான தீவிரம் முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஈடுபட்டுள்ளது. தற்போது இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்துள்ள நிலையில் கூவத்தூர் ஃபார்முலாவை மீண்டும் கொண்டு வந்து அதாவது தனது ஆதரவாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்களை ஏதாவது ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கலாமா என எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் அதிமுக தலைவர்களிடைய கூடுதல் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications