தூய்மை பணியாளரை.. வாய்க்கு வந்தபடி கடுமையாக திட்டிய பெரியவர்.. போலீஸ் வழக்குப் பதிவு
கழிவுநீர் லாரி டிரைவரை ஆபாசமாக திட்டிய முதியவரின் வீடியோ வைரலாகிறது
சென்னை: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. நாடு இருக்கும் நிலையில், இந்த வீடியோ பதிவு பற்றின செய்தி அவசியமா என்று ஒரு பக்கம் தோன்றினாலும், இந்த சமயத்தில்தான் இதை எடுத்து சொல்ல வேண்டி உள்ளது.. காரணம் தூய்மை பணியாளர்களை பற்றின செய்தி அது!
தூய்மை பணியாளர்கள் - கூட்டுவது, அள்ளுவது, எடுப்பது, கொட்டுவது, திணிப்பதுதானே அவர்களுடைய வேலை என்று சாதாரணமாக சொல்லிவிட்டு கடந்து சென்றுவிட முடியாது.
ஏனெனில், நம் இயல்பான வாழ்வினில் ஒன்றுகலந்துவிட்டவர்கள் இவர்கள்.. நம் பொழுதுகளை ஏதோ ஒரு புள்ளிகளில் இணைக்கும் சாமானியர்கள்... இவர்களை தவிர்த்துவிட்டு நம் வாழ்வினை எந்த வழிகளிலும் கழித்துவிட முடியாது.

சமூக விலகல்
இப்போது தொற்று பரவும் காலம்.. இந்த சமயத்திலும் உயிரை துச்சமென மதித்து தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.. "வீட்டிலேயே இருங்க" என்ற முழக்கத்திற்கு தொடர்பில்லாதவர்கள்!! "கைகளை அடிக்கடி கழுவுங்க " என்ற வாசகத்துக்கு சம்பந்தமில்லாதவர்கள்.. "சமூக விலகலை கடைபிடியுங்கள்" என்ற அறிவுறுத்தலுக்கு அப்பாற்பட்டவர்கள்.. இந்த அளவுக்கு போற்றப்படக்கூடியவர்களைதான் ஒரு பெரியவர் வாய்க்கு வந்த மாதிரி பேசியுள்ளார். அது சம்பந்தமான வீடியோதான்.

வீடியோ
ஆனால், அவர் என்ன வார்த்தைகளை திட்டினார் என்பதை அப்படியே பதிவிட முடியாது.. கழிவுநீர் லாரி டிரைவர் மணிகண்டனைதான் அந்த பெரியவர் கீழ்த்தரமாக பேசியுள்ளார்.. சென்னை பள்ளிகரணை ஐஐடி காலனி 7-வது தெருவில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட்டில் கழிவுநீர் எடுப்பதற்காக மணிகண்டன் சென்றிருக்கிறார்.. அப்பொழுது அதே பகுதியில் வசித்து வந்த சந்திரசேகர் என்ற பெரியவர் அங்கு வந்தார்.

மணிகண்டன்
மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் கடந்த 10-ம் தேதி இதுகுறித்து பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 10 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.. பெரியவர் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதை கண்டு அதிர்ந்து போன மணிகண்டன், பிறகு அவமானத்திற்கும் ஆளானார்.. ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் தன்னை திட்டுவதை வீடியோவாக எடுத்து கொண்டு, பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.

புகார்
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சந்திரசேகர் மணிகண்டனை இழிவாக பேசிய அந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. பார்ப்பவர்கள் எல்லாருமே அதிர்ச்சியில் உறைந்து வருகின்றனர். ஏனெனில் அந்த பெரியவரின் வயசுக்கும், அவர் பேச்சுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை.

அலட்சிய வார்த்தைகள்
இந்த பெரியவருக்கு எப்படியும் 70 வயதிருக்கும்.. ஆணவ பேச்சும், அதிகார தொனியும், மிரட்டல் வார்த்தைகளும், புழு, பூச்சியைவிட கேவலமாக பேசும் அலட்சிய வார்த்தைகளும் நம்மை மிரள வைக்கிறது.. வயதில் மூத்தவர்கள் பக்குவம் நிறைந்தவர்கள் என்று சொல்வார்கள்.. ஆனால் இந்த சந்திரசேகர் இந்த வயசிலேயே இப்படி பேசுகிறார் என்றால், இவரால் எத்தனை பேர் இதுவரை சுடுசொல்லால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ தெரியவில்லை.
அதிர்ச்சியாக இருக்கிறது அவரது ஒவ்வொரு வார்த்தையும்!












Click it and Unblock the Notifications