அடேங்கப்பா.. சென்னையில் ஒரே வாரத்தில் 4 மடங்கு அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. மக்களே உஷார்
சென்னையில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களில் 4 மடங்கு கொரோனா பரவல் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தாலும் மக்கள் முக கவசம் இன்றி அலட்சியமாகவே ஊர் சுற்றி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது அலை தாக்கத்தின் போது தினசரியும் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி இருந்தது. சென்னையிலும் அப்போது நோய் தொற்று அதிகரித்து காணப்பட்டது. மாநில அளவிலான தினசரி பாதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையிலேயே 50 சதவிகித பாதிப்பு பதிவாகி வந்தது. தினசரியும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு
கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது.
அந்த வகையில் டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 700க்கும் கீழ் சென்றது. சென்னையில் தினசரி பாதிப்பு 150க்கும் கீழ் குறைந்தது. நவம்பர் இறுதியில் ஓமிக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் இறுதியில் இருந்தே மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த 27ஆம்தேதி அன்று சென்னையில் 172 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் 605 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

மள மளவென உயர்வு
கடந்த 6 நாட்களில் கொரோனாவின் வேகம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 28ஆம் தேதியன்று சென்னையில் 194 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அன்றைய தினம் தமிழகம் முழுவதும் 612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்துகொண்டே வந்தது.

4 மடங்கு அதிகரிப்பு
சென்னையில் 29ஆம் தேதியன்று 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. கடந்த 31ஆம் தேதி 589 ஆக அதிகரித்தது. புத்தாண்டு தினத்தன்று சென்னையில் கொரோனா தினசரி பாதிப்பு 682 ஆக இருந்தது. தமிழகம் முழுவதும் அன்று 1,489 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்படி கடந்த 27ஆம்தேதியில் இருந்து ஜனவரி 2ஆம் தேதி வரையில் சென்னையில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளது.

அச்சமின்று சுற்றும் மக்ள்
மாநில அளவிலான தினசரி பாதிப்புடன் ஒப்பிடும் போது சென்னையிலேயே 50 சதவிகித பாதிப்பு பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படி கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் அது தொடர்பான அச்சமின்றி அலட்சியமாகவே சுற்றி வருகின்றனர். புத்தாண்டையொட்டி கடந்த 2 நாட்களாக சென்னையில் பொழுதுபோக்கு இடங்களில் அதிக அளவிலான மக்கள் கூடியுள்ளனர்.

முககவசம் அணியாத மக்கள்
மெரினா கடற்கரைக்கு யாரும் வர வேண்டாம் என அறிவுறுத்திய பின்னரும் மக்கள் தடையை மீறி கூடினர். பொது இடங்களிலும், வணிக வளாகங்களிலும் திரளும் மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலேயே சுற்றி வருகின்றனர். சென்னை காவல்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Recommended Video

கட்டாயம் முக கவசம்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால் அவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த விதிகளை மீறுவோருக்கு தயக்கமின்றி அபராதம் வசூலிக்க சுகாதாரத்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications