டிசம்பர் 30ஆம் தேதி புதுச்சேரியில் பாமக புத்தாண்டு பொதுக்குழு! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு வரும் 30ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன் 2023-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு
பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் திசம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் 30.12.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெறும்.

யார் யார் வருகிறார்கள்?
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையேற்பார். கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அனைத்து அணிகள்
அனைத்து அணிகள் இக்கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர்.இந்தக் கூட்டங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுடன் மருத்துவர் அய்யா அவர்கள் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வார்.

பணித்திட்டங்கள்
2022-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கட்சி மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்படுவதுடன், 2023-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணித்திட்டங்கள் குறித்து இந்தப் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் விரிவாக விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications