"விவசாயிகளுடன் ஒரு நாள்.." தமிழகத்தில் அறிமுகமாகிறது புது திட்டம்: சட்டசபையில் அறிவித்த அமைச்சர்
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நேருக்கு நேர் சென்று அறிந்து அதற்கு தீர்வு காண, "விவசாயிகளுடன் ஒரு நாள்" என்ற திட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் இன்றைய தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போதுதான் இது குறித்த அறிவிப்பை விவசாயத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

விவசாயிகளுடன் ஒரு நாள் திட்டம்
பேரவையில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்க 'விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்' செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

என்ன சிறப்பு
அப்படி என்ன சிறப்பு இந்த திட்டத்தில்? இருக்கிறது. அதாவது, மாதம் ஒரு நாள் அனைத்து எம்எல்ஏக்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டுமாம். ஓரு வருடத்தில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தனது பேச்சின்போது அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

1 கோடி மானியம்
காளான் உற்பத்தி கூடம் அமைக்க 100 பெண்களுக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரூர், நாகை, சிவகங்கையில் 30 கோடி ரூபாயில் அரசு வேளாண்மை கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெல் உற்பத்தி உயர்த்த நடவடிக்கை
மேல்மலையனூர், வல்லம், மாதனூர், அரூரில் வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்க 10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நெல் உற்பத்தியை உயர்த்த 25 ஆயிரம் ஏக்கரில் துத்தநாக சல்பேட்டும், ஜிப்சமும் 50% மானியத்தில் வழங்கப்படும் என்று பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
Recommended Video

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்
தர்மபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூரில் 4 கட்டங்களாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் அறிவித்தார். விவசாயிகளுடன் ஒரு நாள் திட்டத்தின் மூலம், அவர்கள் கஷ்டங்களை எம்எல்ஏக்கள் அறிந்து கொண்டு செயல்படுவார்கள் என்பது முதல்வரின் திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications