ஸ்டாலின் குடும்பத்திலிருந்து இன்னொரு அரசியல்வாதி? திமுகவில் இப்போ இதுதான் டிரெண்டிங் டாபிக்!
சென்னை : தி.மு.கவில் முதல்வர் குடும்பத்திலிருந்து அரசியலுக்கு இன்னொருவர் தயாராகி வருவதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பொறுப்பு அளிக்கப்படவிருப்பது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனமாகியிருக்கும் சூழலில் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து இன்னொருவர் அரசியலுக்கு வரவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துர்கா ஸ்டாலினின் தம்பியான ஜெய ராஜமூர்த்தியின் அரசியல் பேச்சு, தி.மு.க மேல்மட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதே தற்போதைய ட்ரெண்டிங் டாபிக்.
8 நாட்களில் 2 பெரிய சம்பவங்கள்.. இப்படி ஆகிடுச்சே.. கையை பிசைந்த அறிவாலயம்.. கட்டம் கட்டும் முதல்வர்
வாரிசு அரசியல்
தி.மு.கவில் கருணாநிதிக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் பலரும் அரசியலில் கோலோச்சி வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று மக்கள் பிரதிநிதிகளாகவும் இருக்கிறார்கள். கட்சியிலும் இவர்களக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மு.க.அழகிரி தற்போது ஒதுங்கியிருந்தாலும் அவரும் எம்.பியாகவும் அமைச்சராகவும் இருந்தவர்தான்.
இவர்கள் மட்டுமல்லாது ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தி.மு.கவின் அதிகார மையமாக இருக்கிறார். அவர் சொல்வதையே ஸ்டாலின் கேட்பார் என்னும் அளவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் அவரது கை ஓங்கியிருக்கிறது.
இன்னொரு குடும்ப உறுப்பினர்
இந்நிலையில்தான் ஸ்டாலின் குடும்பத்திலிருந்து இன்னொருவர் அரசியல் பக்கம் வர திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் தம்பியான ஜெய.ராஜமூர்த்தி, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுத்தாளரும், பட்டிமன்ற பேச்சாளரும் கூட. இவரது அரசியல் பேச்சுதான் தி.மு.க வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.
தி.மு.க இளைஞரணியின் தலைமையகமான அன்பகத்தில் கடந்த மே 6ஆம் தேதி திராவிட சமூகப் பேரவை என்ற அமைப்பின் முதலாமாண்டு விழா நடந்துள்ளது. இதில் பங்கேற்று அரசியல் பேசியுள்ளார் ஜெய ராஜமூர்த்தி. இதுதான் அவரது அரசியல் ஆசையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
அரசியல் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் அவரோடு சுப.வீரபாண்டியன், ஜெயரஞ்சன், அமைச்சர் சிவசங்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய ஜெய ராஜமூர்த்தி பா.ஜ.க பற்றியும், தரும்புரம் ஆதீன பட்டின பிரவேசம் குறித்தும் பேசியிருக்கிறார்.
இந்த விழாவில் அவர் ஸ்டாலின் குடும்பத்தினரால் திட்டமிட்டு பேச வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பையும் கொடுத்து அமர வைக்கப்படலாம் என தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஜெய ராஜமூர்த்தி
30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராகப் பணியாற்றும் ஜெய ராஜமூர்த்தி எழுத்தாளரும்கூட. 'நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்', 'புனித வள்ளலாரின் புரட்சிப்பாதை', 'எனது அம்பறாத் தூணியிலிருந்து' என பல நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய 'வள்ளலாரும் பெரியாரும்' எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
வள்ளலார் மீது பற்று கொண்ட இவர், சொந்த ஊரான திருவெண்காட்டில் வள்ளலார் தமிழ் மன்றத்தையும் நிறுவியுள்ளார். பா.ஜ.கவின் ஆன்மீக அரசியலுக்கு தி.மு.கவின் பதிலடி கொடுக்கும் குரலாக இவர் இருப்பார் என்கிறார்கள்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
ஏற்கனவே தி.மு.கவில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கமே இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் இவரை இறக்கினால் வெறும் வாய்க்கு அவல் பொரி கொடுத்த கதையாகிவிடும் என்பதாலேயே ஸ்டாலின் சற்று காத்திருக்கச் சொல்லியிருக்கிறாராம். நல்ல நேரமும், சூழலும் வரும்போது ஜெய ராஜமூர்த்தி கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என உடன்பிறப்புகள் கிசுகிசுக்கின்றனர்.