திமுக திட்டங்களை பொறுக்க முடியவில்லை.. அமைச்சர்கள் பேச்சை பெரிதாக்க இதுதான் காரணம்.. அப்பாவு கருத்து
சென்னை: திமுக அரசின் நல்ல திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்கள் பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
அண்மையில் திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, 'இப்போ பஸ்ல எப்டி போறீங்க? இங்க இருந்து எங்க போக வேணும்னாலும் ஓசி. ஓசி பஸ்ல தான போறீங்க' என பேசினார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் சர்ச்சையான நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். ஓசி என குறிப்பிட்டு பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை அமைச்சர் கொச்சைப்படுத்திவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

அமைச்சர் பொன்முடி விளக்கம்
இதனைத்தொடர்ந்து, ஓசி பேருந்து பயணம் என விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை. கீழே மக்கள் பேசியதை நான் கலோக்கியலாக சொன்னதைத் தவறாக புரிந்துகொண்டனர் என்று விளக்கம் அளித்தார்.

மூதாட்டி வீடியோ சர்ச்சை
இதனிடையே கோவையில் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்க மறுத்து, கட்டண பயணச்சீட்டு தருமாறு நடத்துநரிடம் மூதாட்டி கேட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து இது அதிமுக தொழிற்நுட்ப அணியின் செயல் என்று திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுகவை சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அப்பாவு பேச்சு
இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சபாநயகர் அப்பாவு கலந்து கொண்டார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசுகையில், காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைப்பெறுகிறது. ஆனால் காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனைக்குரியது என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மறைமுகமாக விமர்சித்தார்.

அமைச்சர்கள் பேச்சு பெரிதாக்கப்படுகிறது
தொடர்ந்து, 10 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் செயல்படாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தான் உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட தொடங்கி உள்ளது. ஆனால் திமுக அரசின் நல்லாட்சியை கொச்சைபடுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அரசின் நல்ல திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்கள் பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications