ஓபிஎஸ் கோஷ்டிக்கு அடிமேல் அடி- ஆபீஸ் சாவி வழக்கிலும் பெரிய செட் பேக்.. அதிமுகவில் எதிர்காலம் அம்போ?
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கைத் தொடர்ந்து தலைமை அலுவலக சாவிக்கு உரிமை கோரிய வழக்கிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என இரட்டைத் தலைமையுடன் செயல்பட்டு வந்தனர். ஆனால் திடீரென எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தியது.

ஜூன் பொதுக்குழு
இந்த களேபரங்களுக்கு மத்தியில் கடந்த ஜூன் 23-ந் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஒற்றைத் தலைமைக்கான தீர்மானம் கொண்டுவர இபிஎஸ் கோஷ்டி திட்டமிட்டிருந்தது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றம் சென்றது. இதனால் ஜூன் 23-ந் தேதி பொதுக்குழுவில் எந்த தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை.

ஜூலை பொதுக்குழு
அதேநேரத்தில் ஜூலை 11-ந் தேதி புதிய பொதுக்குழு நடைபெறும் என இபிஎஸ் தரப்பு அறிவித்தது. இப்பொதுக்குழுவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் கோஷ்டி நுழைந்தது. இருதரப்புகளுக்கும் இடையே பெரும் மோதல் ஏர்பட்டது. இம்மோதலால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

அடுத்தடுத்த தீர்ப்புகள்
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதலில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருந்தாலும் கடைசியில் இபிஎஸ் தரப்புதான் வென்றது. கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அதிமுக இபிஎஸ் கோஷ்டியின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. மேலும் அதிமுக தலைமை அலுவலக சாவியும் இபிஎஸ் தரப்பிடமே கொடுக்கப்பட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு மிகப் பெரும் பின்னடைவாக கருதப்பட்டது.

ஓபிஎஸ்க்கு சிக்கல்
இதனைத் தொடர்ந்து சென்னை ராய்ப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இபிஎஸ், ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சென்றார். அப்போது ஓபிஎஸ் தரப்பும் தாங்களும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வோம் என மனு கொடுத்தது. ஆனால் சென்னை போலீசாரோ, நீதிமன்ற அனுமதி பெற்று வந்தால்தான் போலீஸ் பாதுகாப்பு தருவோம். இதுவும் ஓபிஎஸ்-க்கு செட் பேக்கானது.

உச்சநீதிமன்றத்திலும் அடி
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலக சாவிக்கு உரிமை கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது ஓபிஎஸ் தரப்பு. இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இம்மனுவை விசாரித்து தள்ளுபடி செய்தது. இப்படி அடுத்தடுத்து ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றங்களில் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறது. இதனால் அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிர்காலம் என்பது உள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications