சூடுபிடிக்கும் கேம்.. பண்ருட்டி ராமசந்திரன் தலைமையில் மா.செக்கள் கூட்டம்! ஓபிஎஸ் டீம் பரபர அறிவிப்பு
சென்னை : பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில், புதிதாக நிர்வாகிகளை நியமிப்பதில் வேகம் காட்டி வந்தார் ஓபிஎஸ். தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
இந்நிலையில், வரும் டிசம்பர் 21ஆம் தேதியன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் ஒப்புதலோடு அறிவிக்கப்படுவதாக தலைமைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் vs எடப்பாடி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்தது. இதனையடுத்து, கடந்த 6 மாதங்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளை நியமித்து வந்தார். சமீபத்தில் பேட்டியளித்த ஓபிஎஸ், அதிமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படும். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்நிலையில், வரும் 21ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில்
சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் 21-12-2022 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர் தலைமையில்
அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக அரசியல் ஆலோசகராக ஓபிஎஸ் நியமித்த நிலையில், பண்ருட்டியாரை கட்சியில் இருந்தே நீக்கி உத்தரவிட்டார் எடப்பாடி பழனிசாமி. பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பிற்கு தகுதியற்றவர் என விமர்சித்துப் பேசி இருந்த நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன், ஒரு கிளை செயலாளர் ஆவதற்கு கூட தகுதியற்றவர் என காட்டமாக விமர்சித்தார் ஈபிஎஸ். இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மா.செக்கள் கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

பாஜக தலைவர்களுடன் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி உடனான மோதலுக்கு மத்தியில், சமீபத்தில் குஜராத் சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். அமித்ஷாவுடன் சுமார் கால் மணி நேரம் ஓபிஎஸ் பேசியதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பாஜக அரசால் அழைக்கப்பட்டிருந்தார்.

அடுத்தடுத்து விக்கெட்
சில வாரங்களுக்கு முன்பு வரை, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து ஆங்காங்கே நிர்வாகிகள் ஓபிஎஸ் அணிக்கு தாவி வந்த நிலையில், தற்போது சூழல் மாறியுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ், திமுகவிற்குச் சென்றுவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர், மீண்டும் எடப்பாடி அணிக்கே சென்றுள்ளனர். ஓபிஎஸ் அணியில் மேல்மட்டத்திலும் சிலர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில், மா.செக்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறார் ஓபிஎஸ்.

பொதுக்குழு வழக்கு ட்விஸ்ட்
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நேரமின்மை காரணமாக தள்ளி வைக்கலாமா என நீதிபதிகள் கேட்டதற்கு ஈபிஎஸ் தரப்பே முன்வந்து, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் தள்ளிவைக்கக் கோரியது. இதையடுத்து விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஓபிஎஸ், வழக்கை தள்ளிப்போட முயன்று வந்த நிலையில், ஈபிஎஸ் தரப்பும் அதே முயற்சியை மேற்கொண்டது ட்விஸ்ட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications