நதியினில் வெள்ளம்..கரையினில் நெருப்பு..இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு - ஓபிஎஸ் திரிசங்கு நிலை
நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு இதுவே என் நிலை என்று சிவாஜி படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி சட்டசபையில் பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறி
"நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு" என்று சிவாஜி பட பாடலை மேற்கோள் காட்டி இதுவே என் நிலை என்று பேசினார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அவையின் தொடக்கத்திலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். மத்திய அரசு இயற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களும் நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்று தெரிவித்த முதல்வர் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம், வாணிப சட்டம், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மண்ணையும் விவசாயிகளையும் காக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இல்லை. வியர்வை சிந்தி விளைவிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை.
மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மூன்று சட்டங்களும் உள்ளன. சுதந்திர இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம் போன்ற எழுச்சிமிகுப் போராட்டம் நடந்தது இல்லை. ஒன்றிய அரசின் சட்டத்தின் மூலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும். மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் சட்டம் கொண்டுவந்தது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சட்டசபையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் நால்வர் முதலில் வெளிநடப்பு செய்தனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவசர கதியில் முடிவெடுக்கக் கூடாது என்று கூறினார். இந்த தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ இயலாத நிலையில் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், "நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவன் சிரிப்பு" என்று சிவாஜிகணேசன் நடித்த தேனும் பாலும் படத்தின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார்.
மூன்று வேளாண் சட்டங்கள் விவகாரத்தின் எனது நிலை என்னவென்று அவை முன்னவருக்குத் தெரியும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறிய உடன் அவையில் சிரிப்பொலி எழுந்தது. வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா என்று துரைமுருகன் கேட்டதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தீர்ப்பு வெளியான பிறகே தன்னால் பேச முடியும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications