தலைவணங்கி ஏற்கிறோம்.. முழு தீர்ப்பு வரட்டும்.. ‘ட்விஸ்ட்’ நடக்கும்.. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பரபர!
உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வகித்து வந்த பதவிகள் செல்லாததாகியுள்ளன. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம், அதேசமயம் முழு தீர்ப்பையும் படித்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார்.
புகழேந்தி, ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்று சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு மூலம் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்றாகியிருப்பதால், அவர் அறிவித்த நியமனங்களும் செல்லாததாகியுள்ளன.

ஓபிஎஸ் நீக்கம்
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் அதிகார மோதலைத் தொடர்ந்து, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்முறையீடு
இந்தப் பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என உத்தரவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

பரபர தீர்ப்பு
இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தனர். மேலும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பொதுக்குழு முடிவுகள் செல்லும் என்ற உத்தரவின் மூலம், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்றாகியுள்ளது.

தலைவணங்கி ஏற்கிறோம்
அதன் காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் மேற்கொண்ட நியமனங்கள் அனைத்தும் செல்லாததாகிவிடுகிறது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்துப் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனக்கு கிடைத்த தகவல் படி, உட்கட்சி விவகாரங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை, பொதுக்குழு செல்லுமா செல்லாதா என்று மட்டும் தீர்ப்பளிக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

உயிர் வரும்
மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யும்போது சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்கள். அது என்னவென்பதை முழு தீர்ப்பை பார்த்தால் தான் நமக்குப் புரியவரும். இப்படி ஒரு தீர்ப்பை ஒருவருக்கு சாதகமாக வந்ததாக கருதி கொண்டாடிய பிறகு, தீர்ப்பை விரிவாகப் பார்க்கும்போது நிலைமை மாறலாம். உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி விவகாரத்தை பிரதான சிவில் வழக்கில் பார்த்துக்கொள்ளுங்கள் என உத்தரவிட்டனர். அதற்கு மீண்டும் உயிர் வரும். அதையும் பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே, முழு தீர்ப்பையும் படித்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications