இப்போ போக வேண்டியதுதானே டெல்லிக்கு.. ஏர்போர்ட்டுக்கு கூட போகமுடியாது.. எடப்பாடியை விளாசிய புகழேந்தி!
சென்னை : தமிழக சட்டசபையில் சபாநாயகரை எதிர்த்து ரகளை செய்யும் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்று லோக்சபா சபாநாயகரை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது தானே என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதலை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்தார்.
சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கையை மாற்றுமாறு சபாநாயகரிடம் ஈபிஎஸ் மனு அளித்த நிலையில், சபாநாயகர் எந்த மாற்றமும் செய்யவில்லை. இதனை எதிர்த்து நேற்று எடப்பாடி அணியினர் போராட்டம் நடத்தினர்.
ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக எம்.பி இல்லை என்று லோக்சபா சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார் ஈபிஎஸ். ஆனால், அவரது கடிதத்தை சபாநாயகர் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோமாளியா மட்டும் இருக்கக்கூடாது
எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் போராட்டம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, "அடிப்படையே இல்லாத எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவிக்காக போராடி கோமாளியாக திகழ்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதலாளியாக இருக்கலாம், தொழிலாளியாக இருக்கலாம், அல்லது படிப்பாளியாக இருக்கலாம் அல்லது முட்டாளாக கூட இருக்கலாம். ஆனால் கோமாளியாக மட்டும் இருக்கக்கூடாது. சபாநாயகர் தெளிவாக கூறியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கேட்காமல் ரகளை செய்துள்ளனர். விட்டால் இருக்கையை தூக்கிக்கொண்டு கூட ஓடுவார்கள்.

டெல்லிக்கு போய் குரல் கொடுக்கலாமே
இங்கு சபாநாயகரை மதிக்காமல் ரகளை செய்யும் எடப்பாடி பழனிசாமி, ஓபிரவீந்திரநாத்தை நீக்கக் கோரி நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதினீர்களே அவர்களும் உங்கள் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. டெல்லி சென்று பாஜக ஒழிக, மோடி ஒழிக, சபாநாயகர் ஒழிக என்று கூச்சலிட முடியுமா? ஏன் செய்யவில்லை? எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் கூட செல்ல மாட்டார்.

ஏன் இன்னும் அதே வீட்டில்
நீங்கள் முதல்வராக இருந்தபோது தங்கி இருந்த வீட்டிலேயே ஏன் இப்போதும் தங்கி இருக்கிறீர்கள்? முதலமைச்சர் ஸ்டாலின் காலை பிடித்து வாங்கினீர்களா? ஸ்டாலினிடம் ரகசியமாக பேசி கெஞ்சி வாங்கி உள்ளீர்களே.. அந்த வீடு மட்டும் உங்களுக்கு வேண்டுமா? அதை விட்டு வெளியே வாருங்கள்? எதற்காக திமுக அரசிடம் சலுகை பெற்று அந்த வீட்டில் இருக்கிறீர்கள்? இதுபோன்ற சலுகைகள் எல்லாம் நீங்கள் பெறலாமா?

மோடி திட்டுவார்னு பயமா?
தமிழ்நாட்டில் இந்தியை வரவிடாமல் தடுத்து நிற்கும் பெருமை திராவிட கட்சிகளுக்கு உண்டு. இந்தி திணிப்பு எதிர்ப்பை பற்றி சட்டமன்றத்தில் முதல்வர் பேசுகிறார். அதை ஆதரித்து ஒரு மணி நேரம் கூட அமராமல் எடப்பாடி பழனிசாமி வெளியே செல்கிறார் என்றால் பிரதமர் மோடி ஏதாவது சொல்வார் என்று அல்லது தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைவர்கள் ஏதாவது சொல்வார்கள் என்று பயப்படுகிறீர்களா?

திசைதிருப்ப நாடகம்
தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்றீர்களே.. கொன்றதோடு மட்டுமல்லாமல் அதை டிவியில் பார்த்தேன் என்று கூறுகிறீர்களே! உங்களைப் போன்ற ஒரு முட்டாளை பார்க்க முடியுமா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி தண்டிக்கப்பட வேண்டியவர், அவரை விட்டு விடக்கூடாது. இந்தி திணிப்பு எதிர்ப்பு, துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான தொடர்பான அறிக்கை ஆகியவற்றை எல்லாம் திசைதிருப்பவே கருப்பு சட்டை அணிந்து கொண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர்" என புகழேந்தி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications