சொல்லிட்டாங்கள்ல.. உறுதியா பொதுக்குழு செல்லாதுனுதான் தீர்ப்பு வரும்.. அடித்து சொல்லும் வைத்திலிங்கம்
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதே எங்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றி என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த மனு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை தசரா விடுமுறைக்குப் பின்னர் நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஓபிஎஸ் தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும்வரை பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தவும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இடைக்காலத் தடை
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தத் தயாராகி வந்த நிலையில் இடியாக இப்படியொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைத்திலிங்கம்
இந்நிலையில், இந்த உத்தரவு குறித்துப் பேசியுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதுவே எங்களுக்கு கிடைத்துள்ள சாதகமான செய்திதான். இந்த உத்தரவு மூலம் முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. தேர்தல் நடத்தக்கூடாது என்று சொல்லியிருப்பதன் மூலம், நிச்சயமாக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பு வரும்.

21ஆம் தேதி இருக்கு
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நவம்பர் 21ஆம் தேதி எங்கள் வாதத்தை எடுத்து வைப்போம். அவர்களும் வாதங்களை வைப்பார்கள். உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு கொடுக்கிறதோ அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications