இந்தியாவில் இந்த வாரம் துவங்குகிறது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3வது கட்ட டிரையல்.. யாருக்கு முதல் டோஸ்?
சென்னை: ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகள், இந்த வாரம், மும்பை, புனே உட்பட இந்திய நகரங்களில் துவங்க உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது.
பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டது.
சீனாவை ஆச்சர்யப்படுத்திய பாகிஸ்தான்.. கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை.. மாஸ் முயற்சி!
20 இடங்கள்
இதுவரை இரு கட்ட பரிசோதனைகள் நிறைவடைந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. மூன்றாம் கட்ட பரிசோதனைகள் துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில், 20 மையங்களில், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இந்த வாரம் நடத்தப்படுகிறது. மொத்தம், 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
சீரம் ஏற்பாடு
"கோவிட் -19 ஹாட்ஸ்பாட்களாக இருக்கும் ஐந்து வெவ்வேறு பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 20 வெவ்வேறு இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து சுமார் 12 மருத்துவமனைகளில் சோதனைகளை நடத்த நாங்கள் முயல்கிறோம்" என்று சீரம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனம்தான், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் இந்திய உற்பத்தி பங்குதாரர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
முதல் டோஸ்
ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகளை நடத்த இந்தியா தயாராகி வருகையில், அனைவரின் மனதிலும் உள்ள முக்கிய கேள்வி ஒன்றுதான். தடுப்பூசி பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவுடன் தடுப்பூசியின் முதல் டோஸ் யாருக்கு கிடைக்கும்? என்பதுதான் அந்த கேள்வி.
மருத்துவ பணியாளர்கள்
"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாகியிருக்கும். எனவே அவர்கள் முன்னுரிமை பிரிவில் வரமாட்டார்கள்" என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு கூறியிருந்தார். எனவே அவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி விலை என்ன?
அடுத்ததாக கொரோனா வைரசுக்கு எதிரான இந்த தடுப்பூசியின் விலை என்னவாக இருக்கும் என்பது பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது. 3 அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு விலை இருக்க கூடும் என்கிறது சீரம் நிறுவன வட்டாரம். அதாவது, அதிகபட்சமாக இந்திய மதிப்பில் தடுப்பூசியின் விலை 300 ரூபாய்க்கு கீழே இருக்கும். இப்போதைக்கு இதை உறுதியாக தெரிவிக்க முடியாது. தடுப்பூசி விலை சற்று அதிகமாகவும் இருக்கலாம். இவ்வாறு சீரம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.