தட்டித் தூக்கிய பாலக்கோடு.. சென்னை வழக்கம்போல மிக மிக மோசம். சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்
சென்னை: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியிலும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்தினர்.
தமிழகத்தில் அதிகமான வாக்கு எங்கே.. குறைவான வாக்கு எங்கே.. 234 தொகுதிகளின் முழு நிலவரம்.
வாக்குப்பதிவு மையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்பட்டது. வாக்களிக்க வரும அனைவருக்கும் மாஸ்க்குகளும் க்ளவுஸ்களும் கட்டாயமாக்கப்பட்டிருந்தது
72.78% வாக்குகள் பதிவு
நேற்று மாநிலம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வெகு சில இடங்களில் மட்டுமே சிறியளவில் வன்முறை ஏற்பட்டது. அதுவும் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பாலக்கோடு, எடப்பாடி தொகுதிகளில் அதிகம்
அதிகபட்சமாகத் தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை தொகுதியில் 86.15% பேர் வாக்களித்துள்ளனர். அதேபோல முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகளும், தேனி வீரபாண்டி தொகுதியில் 85.53% வாக்குகளும் திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் தொகுதியில் 85.99% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சென்னை ரொம்ப மோசம்
அதேபோல குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து தி.நகரில் 55.92% பேரும் வேளச்சேரியில் 55.95% பேரும் வாக்களித்துள்ளனர். மேலும், மயிலாப்பூர் தொகுதியில் 56.59% வாக்குகளும் அண்ணாநகரில் 57.02% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த ஐந்து தொகுதிகளும் சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியிலான வாக்குப்பதிவு
மாவட்ட வாரியாக பார்க்கும்போது கரூரில் அதிகபட்சமாக 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 82.47%, தர்மபுரி மாவட்டத்தில் 82.35%, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 80.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல குறைந்தபட்சமாகச் சென்னையில் வெறும் 59.06% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் 66.65% செங்கல்பட்டில் 68.18% வாக்குகள் பதிவாகியுள்ளன.