நான் இருக்கும் வரை ஏர் போர்ட் வராது.. விவசாய நிலங்களை அழிப்பதுதான் வளர்ச்சியா.. சீமான் ஆவேசம்!
காஞ்சிபுரம்: நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்காக ஏகனாபுரம், பரந்தூர், நெல்வாய் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், 30-க்கும் மேற்பட்ட நீர் நிலைகள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதனிடையே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் 2028ம் ஆண்டுக்குள் அமையாவிட்டால் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி முடங்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதேபோல் அமைச்சர் எ.வ.வேலு, விமான நிலையத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு மூன்றரை மடங்கு அதிக இழப்பீடு வழங்கப்படும், மாற்று நிலம் வழங்கப்படும் மற்றும் புதிதாக வீடு கட்ட நிதியுதவி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
சரத்குமார் செய்தது தப்புங்க.. ஏற்க முடியாது.. சீமான் விமர்சனம்! ஆன்லைன் ரம்மி விளம்பரத்தால் ஆத்திரம்
சீமான் சந்திப்பு
ஆனால் நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் 12 கிராமங்களைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார்.
சீமான் பேச்சு
இதனைத்தொடர்ந்து விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கிராம மக்களுடன் சீமான் கலந்துரையாடினார். இதே போல் பரந்தூரை சுற்றி உள்ள மற்ற கிராமங்களுக்கும் சீமான் சென்று அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து ஆதரவு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சீமான் பேசுகையில், அடுத்த 6 ஆண்டுக்குள் விமான நிலையம் கட்டி முடிக்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி முடங்கும் என்று தமிழக அமைச்சர்கள் கூறுகிறார்கள்.
தெலங்கானா வளர்ச்சியடைந்துவிட்டதா?
ஆனால் இதுபோன்ற விமான நிலையங்களை கட்டிய கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் வளர்ச்சியடைந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் 10 ஆயிரம் பள்ளிக் கட்டங்கள் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அதனை சீரமைப்பதற்காக பணிகள் செய்யப்படவில்லை. அதேபோல் அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை நீட்டித்து, இளைஞர்களுக்கு வேலை வழங்கவில்லை. ஏனென்றால் ஓய்வூதியம் வழங்க பணமில்லை. ஆனால் விமான நிலையம் கட்டுவதற்கு பணமிருக்கிறது.
தொலைநோக்கு பார்வை
தமிழக அரசு தொலைநோக்குடன் விமான நிலையம் கட்ட முயற்சியை மேற்கொள்கிறது. ஆனால் வாழும் மக்களின் குடிநீர் தேவை, உணவுத் தேவையை நிறைவேற்ற ஏதாவது தொலைநோக்கான திட்டங்கள் இருக்கிறதா? ஒவ்வொரு முறையும் சென்னை வெள்ளச் சேதத்தை எதிர்கொள்கிறது. கழிவுநீர், மழைநீர் தேக்கமின்றி வழிந்தோட ஏதாவது திட்டம் உள்ளதா? தலைநகரிலேயே இன்னும் பாதை சரியாக போடவில்லை.
ஏர் போர்ட் வராது
எதிர்க்கட்சியாக இருக்கும் போது எட்டு வழி சாலைகளை எதிர்த்து போராடினீர்களா இல்லையா. ஆனால் எட்டு வழி சாலை வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என சொல்லிவிட்டு, பயணம் தூர குறைப்பு சாலை என பெயர் மாற்றி விட்டார்கள். ஏர்போர்ட் எங்கு வேண்டும் என்றாலும் கட்டலாம். ஆனால் விவசாய நிலங்களை உருவாக்க முடியாது. ஒரு விவசாய நிலம் உருவாக வேண்டுமென்றால் பல தலைமுறையில் வேர்வையும் ரத்தமும் சிந்தி இருக்க வேண்டும். நான் இருக்கும் வரை பரந்தூரில் விமான நிலையம் வராது என்று தெரிவித்தார்.