இப்போ இல்லனா எப்போ?. .. ரஜினி ஸ்டைலில் பேசி பணிநிரந்தரம் கேட்கும் பகுதிநேர ஆசிரியர்கள்
சென்னை: தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி உள்ளிட்டவற்றை கற்றுத் தர முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 16,549 பேரை பகுதிநேர ஆசிரியர்களாக 2011-2012ஆம் கல்வியாண்டில் நியமித்தார்.
இந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு முதலில் தொகுப்பூதியமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதற்குப் பின் 2014ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை 40 சதவீதம் உயர்த்துவதாக ஜெயலலிதா அறிவித்தார். இதனால் தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

பணி நிரந்தரம்
பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தார். அப்போது 5ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.

ஊதிய உயர்வு
பின்னர் இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதாவே 2ஆயிரம் உயர்த்தி கொடுத்தார். இதனால் சம்பளம் ரூ. 7 ஆயிரமாக உயர்ந்தது. தொடர்ந்து, எங்கள் பணிநிரந்தரம் குறித்து சட்டசபையிலும் குரல் கொடுக்கப்பட்டது. மேலும் ஆட்சியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

கேட்டது பணிநிரந்தரம், கிடைத்தது 700 ரூபாய்
இதனால் 2017 ஆம் ஆண்டே கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பணிநிரந்தரம் செய்வது குறித்து வாக்குறுதி அளித்தார். ஆனாலும் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 700 ரூபாய் ஊதிய உயர்வை மட்டுமே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார். பணிநிரந்தரம் இன்னும் செய்யப்படவேயில்லை.

விவசாய மக்களை காப்பாற்றுவாரா
இதில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஏழை விவசாய மக்கள் பெரும்பாலும் உள்ளார்கள். எனவே, அனைவரின் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் முன்னேற ஆளும் அதிமுக அரசு கவனம் செலுத்த வேண்டுகிறோம். ஏற்கனவே எங்களைத் தொகுப்பூதியத்தில் நியமிக்க ஜெயலலிதா ஒரு ஆணை போட்டார். இப்போது எங்களை நிரந்தரப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் புதிதாக ஒரு ஆணையிட வேண்டுகிறோம்.

கருணை மனு
இதனை முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரை சுற்றுப் பயணங்களில் நேரில் சந்தித்தும் வலியுறுத்தி வருகிறோம். இதோடு மட்டும் இல்லாமல் கருணை மனுக்களைத் தபால் மூலமாகவும் அனுப்பி வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்க கருணை மனு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மனு நீதி நாளில் கொடுத்து வருகிறோம்.

இப்போ இல்லனா எப்போ
20 அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்குக் கடந்த 10 ஆண்டுகளாக தொகுப்பூதியத்திலே பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என குரல் கொடுத்துள்ளார்கள். இதை அதிமுகவும் இதை ஆதரிக்க வேண்டுகிறோம். ஆளும் அதிமுக அரசு இதைத் தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்" என்றார். பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்திரத்தை இப்போது செய்யாமல் வேறு எப்போது செய்யப் போகிறார்கள் என்பதே அனைவரின் கேள்வியாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications