புறம்போக்கு நிலம்.. எத்தனை வகைகள்? பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? எது செல்லுபடியாகும்? ஓஹோ
சென்னை: பட்டா முக்கியமா? பத்திரம் முக்கியமா? இவைகளில் எது செல்லுபடியாகும்? அரசு புறம்போக்கு நிலங்களின் வகைகள் யாவை? பட்டா இல்லாத புறம்போக்கு இடங்களில் எவ்வாறு பட்டா வாங்குவது? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஒருவர் தன்னுடைய சொத்து மீதான உரிமையை சட்டரீதியாக நிரூபிக்கும் ஆவணத்தைதான் பட்டா என்பார்கள்.. நிலத்துக்காக வருவாய்த் துறை வழங்கும் பதிவு ஆவணம்தான் இந்த பட்டா...

ஒரு நிலம் இவர் பெயரில் தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் சான்றாகும். இதனை நில உரிமை ஆவணம் என்றும் சொல்வார்கள். பட்டாவில் யார் பெயர் உள்ளதோ, அவரே தற்போதைய உரிமையாளர் ஆவார்.
முக்கியத்துவம்: இந்த பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், நன்செய் நிலம் / புன்செய் நிலம், நிலம் அமைந்துள்ள பகுதி, தீர்வை விவரங்கள் விரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்த்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் அப்பா பெயர், போன்றவை அடங்கியிருக்கும்.
பத்திரம் என்பது, சொத்தை விற்பனை செய்தவரிடம் இருந்து, உங்களுடைய பெயருக்கு பதிவு செய்யப்படும் ஆவணமாகும்.. இதுவொரு ஒரு சட்டப்பூர்வ ஆவணம்.. நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால், சொத்துக்கான சில உரிமைகளை வைத்திருப்பவருக்கு இந்த ஆவணம் வழங்குகிறது. பொதுவாக, சொத்து அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டா, பத்திரம்: அந்தவகையில், பட்டாக்களும், பத்திரங்களும் இரண்டுமே முக்கியமானவையாகும்.. எனினும், பத்திரம் தான் வருவாய் ஆவணங்களுக்கு ஆதாரமாக உள்ளது.. ஒரு பத்திரத்தின் அடிப்படையில் தான், பட்டாவும் வழங்கப்படுகிறது.
பத்திரம் மட்டும் இருக்கும் நிலம் புறம்போக்கு நிலம் என்று சொல்லலாம். அந்த நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தினால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் பட்டா இருக்கிற நிலம் சட்டப்பூர்வமான நிலம் ஆகும். அதை அரசாங்கம் கையகப்படுத்தினாலும் அதற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்.. எனவே, பட்டாவும் முக்கியம், பத்திரமும் முக்கியம்.
புறம்போக்கு நிலங்கள்: அதேபோல, அரசுக்கு சொந்தமான நிலத்தையே புறம்போக்கு நிலங்கள் என்கிறோம்.. இந்த அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளாக குடியிருந்து வருவோருக்கு அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டு மனை பட்டாவாக வழங்கப்படுகிறது. அதாவது, 5 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தை வைத்திருந்தால், அந்த குறிப்பிட்ட நிலம் அரசுக்கு உபயோகமில்லாததாக இருந்தால், அந்த நிலத்தை உரிமை கொள்ளலாம்.
அந்த புறம்போக்கு நிலத்திற்கான பட்டா பெறுவதற்கு இவர்கள் தகுதியானவர்கள் ஆவர்.. அரசு புறம்போக்கு நிலங்கள் முக்கியமாக இரண்டாக பிரிக்கலாம். ஆட்சேபனையற்ற புறம்போக்கு, ஆட்சேபனையுள்ள புறம்போக்கு என்று 2 வகைகளில் வரைமுறை செய்து வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுகிறது.
கிராம நத்தம்: ஆட்சேபனையற்ற புறம்போக்கு( Un objectionable Poramboke), என்றால், ஊரிலுள்ள கிராம நத்தம் நஞ்சை, தரிசு, புஞ்சை போன்றவற்றை குறிப்பது.. இதில் கிராம நத்தம் என்பது மக்கள் வசிக்கின்ற அளவிற்கு மேடான பகுதியை தான் கிராம நத்தம் என்பார்கள்.. இந்த நிலங்களில் பட்டவை பெறுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்கலாம்... ஆனால், பட்டா தரலாமா? வேண்டாமா? என்பதெல்லாம் அரசின் முடிவு.. அரசு பயன்பாட்டிற்கு அந்த நிலம் வேண்டும் என்று கருதினால் பட்டா தரமாட்டார்கள்.
ஆட்சேபனையுள்ள புறம்போக்கு (Objectionable Promboke) என்றால், குளம், குட்டை, வாய்க்கால், ஏரி, கண்மாய் போன்ற நீர்வழி நிலங்களை குறிப்பதாகும்.. மயானம், சாலை , காடுகள், வாய்க்கால் , தோப்பு , களம், பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது. கலெக்டரிடமும், கோர்ட்டில் அரசாணை எண் 540 ன்கீழும் முறையிட்டால் மேற்படி ஆக்கிரமிப்புகள் அகற்றுவதுடன், இதுசம்பந்தமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
நிராகரிக்கப்படும்: அதனால், பொதுமக்கள் நீர்நிலை புறம்போக்கு, மயானம், சாலை , காடுகள், மேய்க்கால், தோப்பு , களம், பவுண்டு போன்ற ஆட்சேபனை உள்ள நிலங்களை வாங்கவோ அல்லது பட்டா கோரவோ இயலாது. அப்படியே பட்டா கோரினாலும் அந்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுவிடும்.












Click it and Unblock the Notifications