தடம்மாறும் ஊரடங்கு.. எல்லை மீறும் மக்கள்.. மென்மை காட்டும் போலீஸ்.. கடுமையான முழு ஊரடங்கு வருமா?
சென்னை: காவல்துறை பொதுமக்களிடம் மென்மையாக நடந்து கொள்வதால், உண்மையில் பலர் கொஞ்சம் கூட ஊரடங்கை மதிக்கவில்லை. எல்லை மீறி ஊர் சுற்றுகின்றனர். பல ஊர்களில் மக்கள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. எனவே கடுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்ஸ்லேயே உயிரிழப்புது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. நோயாளிகள் இடம் கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.
ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல், ஊரடங்கை மதிக்காமல் மக்களில் பலர் எல்லை மீறுகின்றனர். கடுமையான நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் 14 நாள் ஊரடங்கு உபயோக மில்லாமல் போய்விடும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இது தொடர்பாக ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்து மக்கள் பலர் வைத்த கோரிக்கைளில் சிலவற்றை இப்போது பார்ப்போம். வினோத்குமார் என்பவர் கூறுகையில், இப்போது இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போதவில்லை. மிக கடுமையான கட்டுப்பாடுகள் அவசியம், தற்போது நிலைமை மிக மிக மோசமாக உள்ளது. உயிர் காக்கும் சேவை தவிர அனைத்து விதமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கவேண்டும். இல்லை என்றால் நாளை நம்முடன் இருக்கும் யாரையும் இழக்கும் நிலை கண்டிப்பாக ஏற்படும் என்று எச்சரிக்கிறார்.
அப்படி வேணும்
விக்னேஷ் என்பவர் கூறுகையில், சார், உத்திரபிரதேசத்துல கடுமையான ஊரடங்கு போட்டதால இப்ப அங்க கொஞ்சம் குறையுது கர்நாடகத்துலயும் ஊரடங்கு நம்ம மாநிலத்துல மட்டும் தான் மக்கள் அலட்சியாம இ௫க்காங்க ஊரடங்கு இன்னு கடுமையானதாக இ௫க்கனும். முதல் அலையில அதிமுக ஆட்சியில எப்பிடி இ௫ந்துச்சோ அப்பிடி வேனும் சார்" என்கிறார்.
கடுமையான ஊரடங்கு அவசியம்
சதீஷ் சாண்டி என்பவர் கூறுகையில், மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இன்னும் கடுமையான ஊரடங்கு அவசியம். பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்று அரசு எண்ணக் கூடாது. எல்லா மக்களையும் இழந்து பின், யாருக்காக நாம் பொருளாதாரத்தை காக்கப்போகிறோம். தயவுசெய்து மக்களை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.
தடை விதிக்க வேண்டும்
முத்துராமலிங்கம் என்பவர் கூறுகையில், சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகளை உடனே விதியுங்கள். ஊரடங்கு என்பது சென்னையில் இல்லை. உடனே விழித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.மருத்துவம் குடிநீர் தவிர அனைத்திற்கும் தடை விதியுங்கள். கடைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் 10மணி வரை மட்டும் திறக்க உத்தரவு இடுங்கள் என்று கூறியுள்ளார்.
மூடுங்கள் ஆலைகளை!
ராஜா என்பவர் கூறுகையில், ஐயா இந்த முழு ஊரடங்கு காலத்தில் அத்திவசியம் இல்லாத தொழிற்சாலைகளை மூடுங்கள் ஐயா..கடந்த ஆண்டை போல கடுமையான ஊரடங்கு போடுங்கள் ஐயா.. அனைத்து தேவையற்ற தொழிற்சாலைகள் செயல்படுகிறது ஐயா...இந்த முழு ஊரடங்கு கால கட்டத்தில் அதையும் செயல்படக்கூடாது என அறிவியுங்கள் ஐயா என்று வலியுறுத்தி உள்ளார்.
கூட்டம் குறைவில்லை
முத்து என்பவர் கூறுகையில், மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு...தற்போதைய முழு ஊரடங்கு எவ்விதத்திலும் நோய்த் தொற்றை குறைக்காது. எல்லோருமே வெளியில் தான் உள்ளனர். மக்கள் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை. காவல்துறையும் கடுமையாக நடந்து கொள்வதில்லை. மிகக் கடுமையான ஊரடங்கு மட்டுமே நோயைக் குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்.
முதல்வருக்கு வேண்டுகோள்
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே தொற்று விகிதம் குறைவதற்கு இந்த ஊரடங்கு எந்த வகையிலும் பலன் அளிக்காது என்கின்றனர் பலர். அரசு. நாளை முதல் 24ம் தேதி மிக கடுமையான ஊரடங்கை அறிவிக்க வேண்டும். சிறிய வகை மளிகை கடை, பால், மருந்து தவிர வேறு எந்த கடையையும் திறக்க அரசு அனுமதிக்கக்கூடாது. காவல்துறை கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ஊரடங்கால் பலன் உண்டு என்கின்றனர் ஊரடங்கை ஆதரிப்போர். முதல்வர் முக ஸ்டாலின் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.