900 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கி சமைச்சு சாப்பிடணுமா?. பசியில் இருந்துடலாம்னு தோணுது.. மக்கள் வேதனை
சென்னை: ரூ 900 கொடுத்து சிலிண்டர் வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கு பதில் பட்டினி கிடக்கலாம் என நினைப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் வந்திருக்கும் புதிய அரசாங்கமாவது தங்களின் கஷ்டத்தை உணர்ந்து சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு இல்லத்தரசிகள் அளித்த பேட்டியில், சிலிண்டர் விலை இந்த அளவுக்கு உயரக் கூடாது. கொரோனா காலத்தில் இது போன்ற விலையேற்றத்தால் எங்கள் வீட்டின் நிலை மோசமாக உள்ளது. சிலிண்டர் காலியானவுடன் கையில் காசு சேர்த்து பின்னர் புக் செய்து வாங்குகிறோம். பார்ப்பதற்குதான் நாங்கள் டீசன்டாக இருக்கிறோம். ஆனால் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். வெளியில் சொல்லாமல் இருக்கோம்.

இவ்வளவு விலை ஏற்றினால் நாங்கள் சம்பாதிக்கும் காசில் பெருமளவு சிலிண்டர் வாங்கவே போய்விடும். பிறகு நாங்கள் எப்படி பிழைப்பது? சிலிண்டருக்கே ரூ 1000 செலவழிக்க வேண்டும் என்றால் மற்ற செலவுகளுக்கு எங்கே செல்வது? பெட்ரோல் விலையை குறைத்தது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிலிண்டர் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 900 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்கி சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக பசியில் இருந்து விடலாம் என நினைக்க தோன்றுகிறது.
ரூ 450 கொடுத்து வாங்கும் போது எங்களுக்கு கஷ்டம் தெரியவில்லை. தற்போது ரூ 950 கொடுத்து வாங்குவதற்கு பேசாமல் பட்டினி கிடப்பதே நல்லது என நினைக்கிறோம். 60, 70 ஆண்டுகளாக மழை, வெயிலில் பிளாட்பாரத்தில்தான் இருக்கிறோம். இன்னமும் எங்கள் வாழ்க்கை தரம் உயரவில்லை. இப்படி சிலிண்டர் விலை ஏறினால் மழைக்காலங்களில் பிளாட்பாரங்களில் உட்கார்ந்து எப்படி அடுப்பை பயன்படுத்தி சமைப்பது?
அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாங்கள் சம்பாதிப்பது கேஸ் வாங்கவே போய்விட்டால் எப்படி சாப்பிடுவது? கேஸ் விலை ஏறினால் நாங்கள் எப்படி ஆட்டோ ஓட்டுவது? இந்த வருமானத்தை வைத்துதான் எங்கள் குடும்பத்தையே நடத்துகிறோம். அவ்வாறிருக்கையில் எப்படி குடும்பம் நடத்துவது? கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து தற்போது லேசாக தலை தூக்குகிறோம். மத்திய அரசு ஏழை நடுத்தர மக்களின் நிலையை உணர வேண்டும். தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் என்பதால் ஆட்டோ ஓட்டும் எங்கள் நிலை பெரும் அவதியில் இருக்கிறது. சவாரியே இல்லாமல் பல நாட்களுக்கு வெறுங்கையுடன் திரும்பி செல்கிறோம்.
நாங்கள்தான் ஆட்டோ ஓட்டுகிறோம். எங்கள் பிள்ளைகளாவது நன்றாக படிக்க வைத்து ஆளாக்க நினைக்கிறோம். ஆனால் அரசாங்கம் இது போல் விலையேற்றினால் எப்படி அவர்களை படிக்க வைப்பது? இருக்கப்பட்டவர்கள் 900 ரூபாய் கொடுத்து வாங்குவார்கள். இல்லாதபட்டவர்கள் என்ன செய்வார்கள் என்பதை அரசு யோசனை செய்ய வேண்டும். காலை 6 மணிக்கு ஆட்டோ எடுத்தால் இரவு 10 மணி வரை இருக்கிறோம். ஆனாலும் சவாரி முன்பு போல் வருவதில்லை. வாரத்திற்கு ஆட்டோவுக்கு வாடகை ரூ 200 கொடுக்க வேண்டும். எப்படி நாங்கள் சமாளிப்பது?
திமுக தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் என்ன சொன்னார். ஆட்சிக்கு வந்தவுடன் சிலிண்டர் மானியம் ரூ 100 வழங்கப்படும் என்றாரே அதை அவர் செய்தாரா? மத்திய அரசு விலையேற்றினால் இவர்கள் வாங்கும் மானியத்தை மக்களுக்கு கொடுத்து விலையை குறைக்கலாமே. மத்திய அரசுக்கு மக்களை நன்றாக வாழ வைக்கும் எண்ணமே இல்லை. ஜிஎஸ்டி மூலம் ரூ 1 லட்சம் கோடி அரசுக்கு கிடைத்துள்ளது. இதை சேர்த்து வைத்து பெட்ரோல் விலையை குறைக்கலாம் என மக்கள் தங்கள் வேதனையை தெரிவித்துள்ளார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினசரி மாற்றி வருகிறது இதனால் இந்தியாவில் அவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இருமுறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சொல்லொண்ணா துயரத்துக்குள்ளாகியுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபாயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 875.50 காசுகளாக அதிகரித்தது.
தற்போது மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ 900.50 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது. இது போல் சிலிண்டரின் விலை தற்போது ஆயிரத்தை நெருங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். தற்போது டெலிவரி கட்டணத்துடன் 930 முதல் 950 வரை உயர்ந்துள்ளது. அடுத்த மாதம் மேலும் உயர்ந்தால் 1000 ரூபாயை எட்டும் என கவலைத் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பால் ஆங்காங்கே ஊதியம் குறைப்பு, ஆள் குறைப்பு நடவடிக்கைகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் தொழிற்சாலைகள், பணியிடங்கள் மூடப்பட்டு வேலையில்லாமலும் ஊதியம் இல்லாமலும் சேமிப்பு பணத்தை வேலையில்லாத நாட்களில் செலவழித்தும் தற்போது ஒன்றும் இல்லாத நிலையில் மக்கள் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக் கூடும் என அஞ்சுகிறார்கள். எந்த அரசாக இருந்தாலும் ஏழை, நடுத்தர மக்களின் நிலையையும் கருத்தில் கொண்டே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பணக்காரர்களை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு சிலிண்டர் விலை, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினால் ஏழைகள் எப்படி பிழைப்பது என்பதை யோசிக்க வேண்டும் என மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications