கொரோனா கேஸ் நம்பர் 913, 915 பாருங்க.. அதிர்ச்சியளிக்கும் சாவுகள்.. தமிழக மக்களே.. உஷாராக இருக்கனும்
சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 74 ஆயிரத்து 622 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் டிஸ்சார்ஜ் விகிதம் என்பதும் அதிகமாக இருக்கிறது. எப்போதுமே அது ஒரு நல்ல விஷயமாக பேசப்படுகிறது. இன்று மொத்தம் 1,358 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், மற்றொரு முக்கியமான விஷயம், இந்த புள்ளிவிவர கணக்கில் இருந்து தெரிய வருகிறது. அது என்னவென்றால், மக்கள் யாரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை அசட்டையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை அதில் அடங்கியுள்ளது.
கொரோனா தாக்கினாலும் பயமில்லை மீண்ட 41,357 பேர் தரும் நம்பிக்கை
கேஸ் நம்பர் 913
இன்றைய புள்ளி விவரத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருப்பது இறப்பு கேஸ் நம்பர் 913. 54 வயதுடைய அந்த ஆண் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 25ஆம் தேதி அட்மிட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கேஎம்சி மருத்துவமனையில் 24ஆம் தேதி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. பரிசோதனை முடிவு 25ம் தேதியான நேற்று வந்தது. அதில் பாசிட்டிவ் என்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி 15 நிமிடம் அளவுக்கு அவர் கார்டியோ பல்மனரி அரெஸ்ட் மற்றும் கோவிட் நிமோனியா பாதிப்புகளால் மரணமடைந்துள்ளார்.
54 வயதுதான்
அதாவது, பரிசோதனைக்கு உட்பட்ட மறுதினம் இவர் உயிரிழந்துள்ளார். வயதும் மிக அதிகம் கிடையாது, 54 மட்டுமே. இதற்கு காரணம், அவர் தாமதமாக மருத்துவமனைக்கு சென்றதும், தாமதமாக பரிசோதனை செய்து உறுதி செய்யப்பட்டதும், பிறகு தாமதமாக சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டதும், என ஆரம்பம் முதல் தாமதம் ஏற்படுத்தியது. இதனால்தான், மருத்துவமனையில் சேர்ந்த அதே நாளில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அந்த நபர்.
ஒரே நாளில்
இறப்பு கேஸ் நம்பர் 914. இவர் 72 வயதாகும் ஆண். ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அட்மிட் செய்யப்பட்டுள்ளார். அன்றைய தினம் பகல் 1.10 மணிக்கு உயிரிழந்துள்ளார். டைப் 2 நீரிழிவு, நிமோனியா என இவரது மரணத்துக்கு காரணம் சொல்லியுள்ளது அரசு.
34 வயது பெண்மணி
இறப்பு கேஸ் எண் 915: விருதுநகரை சேர்ந்த 34 வயது பெண்மணி இவர். மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வந்தார். 23ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்த நிலையில், 24ம் தேதி காலை, 9.30 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பிரச்சினைகள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
தாமதம்
அட்மிட் செய்த நாள், அல்லது அதற்கு அடுத்த நாள் இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வது என்பது தாமதமாக மக்கள் மருத்துவமனையை அணுகுகிறார்கள் அல்லது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை, அல்லது போதிய பரிசோதனை வசதி இல்லை என்பதை எல்லாம் குறிக்கிறது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். எனவே உங்களுக்கு, கொரோனா தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சைக்கு உட்படுவது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.