அதிகனமழையை எதிர்கொள்ளத் தயாராகும் மக்களே...இந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்
அடுத்த 12 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையத் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் 11ம் தேதி அதி கனமழை முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதிகனமழையை எதிர்கொள்ளத் தயாராகும் மக்கள் என்னென்ன பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஒரு வாரகாலமாக வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள் மட்டுமல்லாது தென் மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.
தென்காசி, நெல்லை, விழுப்புரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர் கனமழை காரணமாக நாகை,விருதுநகர்,கடலூர்,ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 11ஆம் தேதி வடதமிழக கடற்பகுதிகளை நெருங்கும். அடுத்து வரக்கூடிய ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் நாளை ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கும் 11ம் தேதி மிக கனமழை முதல் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ள எச்சரிக்கை
அடுத்த 2 நாட்களுக்கு மீண்டும் அதிகனமழை பெய்யப்போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வது அவசியம். மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்வது, மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது போன்றவையே நாம் எதிர் கொள்ள வேண்டியவை. மழைக்காலத்தில் நாம் எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சினை வெள்ளப்பெருக்கு. கடந்த 2015-ம் ஆண்டு சென்னை மாநகர் பெரும் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டது. இந்த ஆண்டும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பல பகுதிகளில் இயல்பு நிலை முற்றிலும் முடங்கி உள்ளது.

என்னென்ன அவசியம்
வந்த பின்னர் போராடுவதை விட வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதை விட வரும்முன் காப்போம் என்பதே நல்லது. மழைக்காலத்தில் நமது பகுதியில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் நமது வீட்டின் மின் இணைப்பு வழிகள் சரியாக உள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். திடீர் மின்தடை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால் வீடுகளில் மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி ஆகியவைகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள்
ஒரு வார காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவு வகைகள், கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், மருந்து மற்றும் பால் பவுடர் மின் விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள், சுகாதாரத்தை பேணி காக்க தேவையான பொருட்கள் முகக் கவசங்கள் போன்றவற்றை வைத்திருக்க வேண்டும்.
குடிநீர், உணவுபொருள்கள்,மருந்துகள் இருக்கவேண்டியது அவசியம். ஒடிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை முன்கூட்டியே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

கால்நடைகள் கவனம்
நீங்கள் அதிகம் மழைநீர் தேங்கும் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றால், ரப்பர் டியூப் போன்ற மிதவைகளை வீடுகளில் தயாராக வைத்து இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை, வீடுகளில் வளர்க்கும் விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம்.

காய்ச்சல் கவனம்
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிப்பது அவசியம். பொதுவாக தமிழகத்தில் குளிர்காலத்திலேயே பருவமழை வருவதால் பல நோய்கள் பரவ வாய்ப்பு அதிகம். இந்த காலத்திலேயே டெங்கு, பன்றிகாய்ச்சல் போன்ற விஷக்காய்ச்சல் அதிகம் பரவுகின்றது. உயிர் இழப்பைஅதிகம் ஏற்படுத்தும் இந்த வகை நோய்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்த நாம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

சுத்தமான குடிநீர் அவசியம்
வீட்டையும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். சுகாதார நடவடிக்கைகளுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். சுத்தமான குடிநீரை பருகவேண்டும். குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம், குளிர்பானம் போன்ற உணவு பொருட்களை கொடுப்பதை இந்த காலங்களில் தவிர்க்க வேண்டும். உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அதிகனமழையை பாதுகாப்புடன் எதிர்கொள்வோம்.












Click it and Unblock the Notifications