பேரறிவாளன் விவகாரம் வேற மாதிரி வெடிக்குது...திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு-தருமபுரிகாங்.தலைவர் ராஜினாமா
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியலில் பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் பேரறிவாளன். இவ்வழக்கில் தம்மை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று பேரறிவாளனை விடுதலை செய்தது.
பேரறிவாளன் விடுதலையை தமிழகம் கொண்டாடி வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்று வாழ்த்தினார். ஆனால் தமிழக பாஜகவும் காங்கிரஸும் வேறுவிதமான நிலைப்பாடுகளை எடுத்துள்ளன.
மேலும் பேரறிவாளன் விடுதலையை கண்டிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இன்று வாயில் வெள்ளை துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர். அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் சந்தித்ததை விமர்சித்தார். இதே கருத்தை சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் அரங்கேற தொடங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக வலியுறுத்தி தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், லஉத்தம தலைவர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என் மனம் ஏற்கவில்லை. எனவே நான் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகிகொள்கிறேன். எனது பதவி விலகலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சிற்றரசு கூறியுள்ளார்.
இது வேற மாதிரி வெடிக்குதே!