குணமடைந்த கொரோனா நோயாளிகள்..சென்னை ஆய்வு.... பிளாஸ்மாவில் அதிர்ச்சி தகவல்!!
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு விரைவாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்மாவுக்கான ரத்த சேகரிப்பில் இருந்து இது தெரிய வந்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்கப்படுகிறது. இதற்காக இந்த நோயில் குணமடைந்த போலீசார் முதல் ரத்த தானம் செய்து வருகின்றனர். இங்கு துவங்கப்பட்டு இருக்கும் ரத்த வங்கிக்கு இதுவரை 200 பேர் ரத்ததானம் செய்துள்ளனர். சிலர் அடிக்கடி ரத்த தானம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து அடிக்கடி ரத்த தானம் செய்பவர்களின் ரத்தம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் IgG antibodies அளவு குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கொரோனா.. இணை நோயாளிகளுக்கு.. பிளாஸ்மா சிகிச்சையால் பலன் இல்லை.. டாக்டர்கள் கருத்து
நோய் எதிர்ப்பு
இந்த ரத்த மாதிரிகளில் டைடர் (Titer) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அளவை கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அடிக்கடி ரத்த தானம் செய்வர்களின் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக மே 25ஆம் தேதி ரத்த தானம் செய்தவரின் நோய் எதிர்ப்பு சக்தி மதிப்பு 4.6 ஆக இருந்துள்ளது. இதுவே, ஜூன் 27ஆம் தேதி அதே நபர் ரத்ததானம் செய்தபோது, நோய் எதிர்ப்பு சக்தி 3.69 ஆக குறைந்துள்ளது. இதுவே ஆகஸ்ட் 7ஆம் தேதி 2.96 ஆக குறைந்துள்ளது.
ரத்த தானம்
இதேபோல் மற்றொருவர் ஜூன் 24ஆம் தேதி ரத்த தானம் செய்து இருந்தார். இதில் நோய் எதிர்ப்பு சக்தி 7.76 இருந்துள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதி நோய் எதிர்ப்பு சக்தி 5.99 ஆக குறைந்துள்ளது.
பலன் இல்லை
இதுகுறித்து முன்னாள் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே. குழந்தைசாமி அளித்து இருக்கும் பேட்டியில், ''நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருக்கலாம். ஆனால், நோய் எதிர்ப்பு முன்பு உருவானதை வைத்து உடனடியாக எதிர்ப்பை காட்டும். மீண்டும் வைரஸ் உடலுக்குள் உருவானால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அந்த வைரஸை அடையாளம் கண்டு, நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்போது ரத்த தானம் செய்வதால் எந்த பலனும் இல்லை என்று மூத்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த ஆய்வுக்கு புள்ளி விவரங்களை சேகரித்து வருகிறோம்'' என்றார்.
உறுதியான தகவல் இல்லை
பொதுவாக வைரஸ் போன்ற நோய்கள் ஒருமுறை உடலில் ஏற்பட்டால், அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி விடும். கொரோனா வைரஸ் விஷயத்தில், இந்த வைரஸ் புதிது என்பதால், நிறைய ஆய்வு முடிவுகள் வெளியான பின்னரே இதுகுறித்து உறுதியான தகவல்கள் தெரிய வரும்.