ஒரு கை பார்த்துருவோம்! தர்மபுரியில் களமிறங்கும் அன்புமணி! 3 நாட்களுக்கு பக்கா ப்ளான்! இதுதான் விஷயமா?
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் மூன்று நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளை பாமகவினர் பிரம்மாண்டமாக செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கட்சியை மறு சீரமைப்பு செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 60 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கியதோடு அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அன்புமணி ராமதாஸ்
குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சினைகள் அவிநாசி அத்திக்கடவு திட்டம் காவிரி உபநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம்
இதற்காக பாமக 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸின் அடுத்தகட்ட பயணம் குறித்த தகவல்கள் என்ன என்பது குறித்து பாமகவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காவிரி உபநித்தி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான அன்புமணி ராமதாஸ் தர்மபுரி மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

3 நாட்கள் நடைபயணம்
தர்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் அதிகளவு தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு உபநீரை கொண்டு வலியுறுத்தி பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் துவக்கி சுமார் பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்பாடுகள் தீவிரம்
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் விரைந்து செயல்படுத்த தமிழக அரசை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகின்ற 19, 20 , 21 ஆகிய தேதிகளை மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஒகேனக்கலில் துவங்கப்படும் இந்த நடைபயணமானது பாப்பிரட்டியில் நிறைய பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பாமக கௌரவ தலைவரான ஜிகே மணி, தர்மபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

செல்வாக்கை மீட்டெடுக்க..
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அன்புமணியின் இந்த பயணம் உதவும் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். அதே நேரத்தில் விவசாயிகள் மத்தியிலும் ஆதரவு கிடைக்கும் என்பதால் இதனை வெற்றிகரமாக செயல்படுத்த தீவிரமாக உள்ளனர் பாட்டாளிகள்.












Click it and Unblock the Notifications