பம்பரமாக சுழலத் தொடங்கும் பா.ம.க... உள்ளாட்சித் தேர்தலுக்கு வியூகம்
சென்னை: உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இம்மாதத்தில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி பம்பரமாக சுழல ஆரம்பித்திருக்கிறது.
பாமகவில் அரசியல் ஆலோசனைக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கியுள்ளதோடு, வன்னியர் சங்கத்திற்கும் புதிய தலைவரை கடந்த வாரம் நியமித்துள்ளார் ராமதாஸ்.
பாமகவின் இந்த திடீர் பாய்ச்சலை கூட்டணி கட்சியான அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் கவனிக்கத் தவறவில்லை.
சென்னையில் பயங்கரம்.. பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு.. நெற்றியில் குண்டு பாய்ந்து பலி
ஓட்டுவங்கி
வடதமிழகத்தில் கணிசமான வாக்குவங்கியை கொண்ட கட்சியாக திகழ்கிறது பா.ம.க.. விழுப்புரம், அரியலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பாமகவின் அடித்தளம் வலுவாக உள்ள நிலையில், மேலும் பல இடங்களில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ராமதாஸ்.
முக்கியப் பங்கு
பாமகவில் இதுவரை அரசியல் ரீதியாக எந்த முடிவுகள் எடுக்க வேண்டுமென்றாலும், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து பேசியே எடுத்து வந்தனர். இந்நிலையில், அரசியல் ஆலோசனைக் குழுவை ராமதாஸ் உருவாக்கியிருப்பதன் மூலம் இனி அந்தக் குழுவும் முடிவெடுக்கும் விவகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.
தொடக்ககால தொண்டர்
பாமக அரசியல் ஆலோசனைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் தீரன், பாமகவின் முதல் தலைவர் ஆவார். அவர் ராமதாசுடன் ஏற்பட்ட மனவருத்தம் காரணமாக பிரிந்து சென்றதால் மேட்டூர் கோ.க.மணி பாமக தலைவர் ஆனார். இதனிடையே தீரன் தனது மனக்கசப்புகளை மறந்து மீண்டும் பாமகவில் இணைந்து 6 மாதங்கள் ஆகிய நிலையில் இப்போது அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக அதிர்ச்சி
இதனிடையே வன்னியர் ஒன்றுபட்டால் ஆட்சியை பிடிக்கலாம் என பெங்களூருவில் அன்புமணி பேசியதை அதிமுக அதிர்ச்சியுடன் பார்க்கிறது. அதிமுக கூட்டணியில் தொடர்ந்தாலும் கட்சியை விட்டுக்கொடுக்காத வகையில் அன்புமணி செயல்படுவது பாமகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
அன்புமணி படை
மேலும், பாமகவில் தம்பிகள் படை, தங்கைகள் படையை உருவாக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், அது களையப்பட்டு இப்போது முழு வீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் படைகள் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் பல நகராட்சிகளையும், பேரூராட்சிகளையும் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது பாமக தலைமை.