"பிரேக்கிங் பேட்" புகழ் போதைப்பொருள்.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்.. வெளிநாடு வரை பரவிய 'நெட்வொர்க்'
போலீஸாரின் இந்த தேடுதல் வேட்டையை அறிந்து இந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த பலர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை: Breaking Bad (பிரேக்கிங் பேட்) என்ற அமெரிக்க சீரியலில் வரும் 'மெத்தாபெட்டமைன்' என்ற போதைப்பொருளை சென்னை கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருவது போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சில கல்லூரி மாணவர்கள், போதைப்பொருளை விற்பனை செய்தவர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் வெளிநாடுகள் வரை இந்த 'போதை நெட்வொர்க்' பரவியிருப்பது தெரியவந்துள்ளது.
'விக்ரம்' பட பாணியில்.. சென்னையில் புழங்கும் போதை மாத்திரைகள்.. ஷாக் ரிப்போர்ட்.. ரோலக்ஸ் யாரு?
கல்லூரி மாணவர்கள்
சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 17-ம் தேதி சந்தேகத்திற்கிடமாக 3 கல்லூரி மாணவர்கள் சுற்றித் திரிந்துள்ளனர். இதனை கவனித்த போலீஸார், அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 3 கிராம் மெத்தாபெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதை பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில், இது வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய விலை மதிப்புமிக்க போதைப்பொருள் ஆகும்.
சினிமா துறை பிரபலம்
இதையடுத்து, இந்த போதைப்பொருள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிக்க பூக்கடை துணை ஆணையரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. பிடிபட்ட கல்லூரி மாணவர்களான சாய் சஞ்சய், சல்மான் ஷாகிர், முகமது நவ்ஃபிக் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வளசரவாக்கத்தை சேர்ந்த ஜியாத் என்பவர் மூலமாகவே பெத்தாபெட்டமைன் தங்களுக்கு கிடைத்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதில் ஜியாத் சினிமா துறையை சேர்ந்தவர் ஆவார்.
போதைப்பொருள் பறிமுதல்
இதன் தொடர்ச்சியாக, ஜியாத்தை கைது செய்த போலீஸார், அவருக்கு எப்படி மெத்தாபெட்டமைன் கிடைத்தது என்று போலீஸார் விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது மண்ணடியை சேர்ந்த மஸ்தான் என்ற 'குருவி' மூலமாக தனக்கு இந்த போதைப்பொருள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். பின்னர் மஸ்தானை கைது செய்து அவர் கொடுத்த தகவலின் பேரில், வியாசர்பாடியில் உள்ள அவரது உறவினர் ஃபர்கத் அலி வீட்டில் இருந்து மெத்தாபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரிய 'நெட்வொர்க்'
பின்னர், ஜியாத் மற்றும் ஃபர்கத் அலியின் செல்போன் அழைப்புகள், பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்த போலீஸார், அதன் மூலமாக இந்த போதைப்பொருள் நெட்வொர்க்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். பிடிபட்ட 10 பேரும் மெத்தாபேட்டமன் போதைப்பொருளை பயன்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் அதை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. இந்நிலையில், போலீஸாரின் இந்த தேடுதல் வேட்டையை அறிந்து இந்த போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த பலர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், இந்த மெத்தாபெட்டமைன் போதைப்பொருள் நெட்வொர்க்கானது வெளிநாடுகள் வரை பரவியிருப்பதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.