மெரினாவில் குவிக்கப்படும் போலீஸ்... காணும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு கடற்கடைக்கு வர தடை .. உஷார் மக்களே!!
சென்னை: நாளை காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளும் பொங்கல் விழா 3 நாட்கள் உற்சாகமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பொங்கல் திருநாளும், இன்று மாட்டுப் பொங்கலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன,
கருப்பாக மாறிய வானம்.. டோங்காவில் சுனாமி ஏற்படும் முன்.. கடலில் என்ன நடந்தது தெரியுமா? பரபர வீடியோ
காணும் பொங்கல்
பொதுவாகக் காணும் பொங்கல் அன்று பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று நேரத்தைக் கழிப்பார்கள். அன்றைய தினம் வீடுகளிலேயே சமைத்து அதனைச் சுற்றுலாத் தலங்களுக்கு எடுத்துச் சென்று பொதுமக்கள் சாப்பிடுவார்கள். கடந்த காலங்களில் காணும் பொங்கல் தினத்தன்று மெரினா உள்ளிட்ட கடற்கரைகளிலும் சரி, பொழுதுபோக்கு பூங்காக்களிலும் சரி கூட்டம் நிரம்பி வழியும்.
கொரோனா கட்டுப்பாடுகள்
இருப்பினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா நம்மை விட்டு முழுமையாக அகலவில்லை. அதிலும் ஓமிக்ரான் காரணமாகப் பல பகுதிகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பல கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடினால் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம் என்பதாலேயே இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தடை
ஏற்கனவே, தமிழ்நாட்டில் பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று, ஜன 14 முதல் 18 வரை வழிபாட்டுத்தலங்களுக்குப் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல கடற்கரை, நீர் நிலைகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி நாளை காணும் பொங்கல் அன்று அதிகளவில் மக்கள் வெளியே செல்வார்கள் என்பதால் அதைத் தடுக்க மாநிலத்தில் நாளை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அறிவிப்பு
காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளன்று யாரும் கடற்கரை பகுதிக்கு வர வேண்டாம் என போலீசார் அறிவித்துள்ளனர். முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் மருத்துவ காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்கு வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Recommended Video
கண்காணிப்பு பணிகள்
போலீசாரின் இந்த உத்தரவுகளைத் தாண்டியும் கூட சிலர் கடற்கரைக்கு வரும் வாய்ப்புள்ளதால் மெரினா கடற்கரையில் நாளை போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் உள்ள கடற்கரைகளில் ஏற்கனவே கடந்த 6ஆம் தேதி முதல் வாக்கிங் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.