ஓய்ந்தது மாண்டஸ்..ஓயாத ’அதிகார’ புயல்! என்னால முடியாது..போட்டுடைத்த இபிஎஸ்! இனி தான் இருக்கு கச்சேரி
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் எவ்வளவோ பேச்சுவார்த்தைகள் நடத்தியும், தனது முடிவில் விடாப்பிடியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியால் டெல்லி தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அவருக்கு எதிரான டெல்லியின் நகர்வுகள் தீவிரமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தை கடந்த ஒரு வாரமாக மிரட்டியே வைத்திருந்த மாண்டஸ் புயல் கூட சென்னையை ஒரு காட்டு காட்டி ஓய்ந்துவிட்டது. ஆனால் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மையம் கொண்டிருக்கும் அதிகாரப் புயல் இப்போதைக்கு ஓயாது போல..
இபிஎஸ்-ஓபிஎஸ் என இரு தலைவர்கள் இரு துருவங்களாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் மன அதிருப்தியில் தான் இருக்கின்றனர். காரணம் கள அரசியல் வேறு மாதிரியாக இருக்கிறது.

அதிமுக மோதல்
திமுக ஆளும் கட்சியாக அரசியல் களத்தில் மிக வலுவாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக அவர்களே வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஆனால் பாஜக, பாமக, காங்கிரஸ் என மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக ஆளும் கட்சியை எதிர்த்து வரும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களோ ஆர்ப்பாட்டம் அறிக்கைகள் என உள்கட்சி சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த விவகாரம் எப்போது முடியும் என்பது தங்களுக்கே தெரியாது என கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
திமுகவை வீழ்த்த வேண்டுமானால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் சேர வேண்டும் என பாஜக தலைமை விரும்பும் நிலையில் எடப்பாடியுடன் சேர முடியாது என அதிரடி காட்டிய டிடிவி தினகரன் மீண்டும் கூறி இருக்கிறார். ஆனால் கூட்டணிக்கு மட்டும் ஓகே சொல்லி இருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வலுவாக எதிர்த்த டிடிவி தினகரன், அதிமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைக்க தயார் என கூறி இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

மறுப்பு
டிடிவி தினகரன் அதிமுகவுக்குள் அல்லது பாஜக கூட்டணியில் வந்தால் அதிமுகவில் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவார். இதன் காரணமாக தங்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உணர்ந்துள்ளது. அவர் வந்தால் சசிகலா வருவார், சசிகலா வந்தால் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதனால் அதிமுக தனது கையை விட்டு போய் விடுமோ என அஞ்சும் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

பேச்சு வார்த்தைகள்
இதுகுறித்து பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக்கொடுக்காமல் இருப்பதால் அவரை பகைத்துக் கொள்ள பாஜக தலைமை விரும்பவில்லை காரணம் 90 சதவீத எம்எல்ஏக்கள் ஆதரவு 95% மாவட்ட செயலாளர்கள் ஆதரவு என அதிமுகவின் தற்போதைய அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பகைத்துக் கொள்ள விரும்பாத பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக ஓபிஎஸ்க்கு ஆதரவு கரத்தை மீண்டும் நீட்டியிருக்கிறது பாஜக.

டெல்லி அதிருப்தி
தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் ஆதரவு ஓபிஎஸ்க்கு இருக்கும் நிலையில் அவரை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென பாஜக தலைமை தொடர்ந்து இபிஎஸ் தரப்பை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக பாஜக மூலமும், மேலிட பொறுப்பாளர்கள் மூலமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதனை முற்றாக மறுத்து விட்டார். இதன் காரணமாக பாஜக தலைமை இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக வரும் காலங்களில் அவருக்கு எதிரான டெல்லியின் நகர்வுகள் தீவிரமாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications