மூச்சு முட்டுதே.. தென் மாவட்ட ரயில்களில் கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம்.. திணறும் பயணிகள்!
சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுகு மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்துள்ளனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக சென்னை எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் கால் வைக்க கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதுவும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கிராமத்தில் உள்ள சொந்த பந்தங்களுடன் கொண்டாடுவதையே மக்கள் விரும்புவர்.
அந்தவகையில் பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, நேற்று முதலே சென்னையில் இருந்து, சொந்த ஊர்களுக்கு சாரை, சாரையாக மக்கள் புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்
ரயில்கள், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள், கார்கள், மோட்டார் சைக்கிள், விமானங்கள் என சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்கின்றனர். இதனால், பேருந்துகளிலும் ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது. போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் இருந்தது. பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடும் போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு, கேகேநகர், மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து இடங்களுக்கும் தனித்தனியே பஸ்கள் இயங்கி வருகின்றன. பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. தாம்பரம், ஜி.எஸ்.டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

ரயில் நிலையத்திலும் கூட்டம்
இதனால், பயணிகள் பலரும் எப்போது பெருங்களத்தூரை தாண்டுவோம்.. என நொந்து கொள்ளும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலை வழிப்பயணத்தில் ஏற்படும் டிராபிக் ஜாம்களால் பல மணி நேரம் வீணாகும் என கருதும் பயணிகள் முதலில் ரயிலில் பயணத்தைதான் நாடுவர். ஆனாலும் ரயில் டிக்கெட்டுகள் எல்லாம் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த்து விடுகின்றன. இதனால் ரயில் நிலையத்திலும் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடிகிறது.

கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ்
முன் பதிவு இல்லாத பெட்டியில் கால் வைக்க முடியாதபடி அளவுக்கு பயணிகள் கூட்டம் உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு பயணிகள் கூட்டம் உள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் போலீசாரின் பாதுகாப்பும் கூடுதலாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் போலீசாரே சிரமப்படும் அளவுக்கு, ரயில் நிலையங்களில் பயணிகள் தலைகளாகவே இருந்தது.

ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம்
இதனால் போலீசார் மிகவும் சிரமத்துடன் பயணிகளை ஒழுங்கு படுத்தினர். பொங்கல் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன் வர வேண்டும் என பயணிகள் முன் வைக்கும் கோரிக்கையாக உள்ளது. இது ஒருபக்கம் இருக்க ஆம்னி பேருந்துகளிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

3 ஆயிரம் வரை வசூலிப்பதாக
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்வதற்கு ரெட் பஸ் போன்ற புக்கிங் செயலியில் வெளிப்படையாக 3 ஆயிரம் வரை வசூலிப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு எச்சரித்துள்ள போதிலும் ஒரு சில பேருந்துகளில் அளவுக்கதிமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் முன் வைக்கும் குற்றச்சாட்ட்டாக உள்ளது.












Click it and Unblock the Notifications