எடப்பாடியின் தனி ஆவர்த்தனத்துக்கு போட்டியாக இரவோடு இரவாக தனி அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இடையேயான மோதல் அதிமுக லெட்டர்ஹெட் இல்லாமல் தனித்தனியாக வெளியிட்டு வருவதன் மூலம் பகிரங்கமாக வெடித்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியில் இருந்து வருகிறார் ஓபிஎஸ். இதனை வெளிப்படுத்தும் வகையில் அதிமுக லெட்டர்ஹெட்டை பயன்படுத்துவதை புறக்கணித்தும் வருகிறார் ஓபிஎஸ்.
தொடங்கி வைத்த ஓபிஎஸ்
அதிமுக லெட்டர் ஹெட் இல்லாமல் தனியாக ஓபிஎஸ் அறிக்கை விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். பொதுவாக அதிமுக அறிக்கைகளில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கையெழுத்திடுவர். ஆனால் இப்போது இருவரும் தனித்தனியே பயணிக்க தொடங்கிவிட்டனர்.
ஈபிஎஸ் முயற்சிகள்
ஓபிஎஸ்-க்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தலாம் என ஈபிஎஸ் தரப்பு நினைத்தது. ஆனால் ஓபிஎஸ்ஸோ சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு தீவிரம் காட்டுகிறார் என்றே தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
எடப்பாடி தனி அறிக்கை
இதனால் ஓபிஎஸ்-க்கு பதில் தரும் வகையில் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக லெட்டர்ஹெட்டை பயன்படுத்தாமல் நேற்று தனி அறிக்கை வெளியிட்டார். ஈபிஎஸ்-ன் இந்த நடவடிக்கைக்கு பதில் தரும் வகையில் நேற்று இரவு ஓபிஎஸ் மீண்டும் தனி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் பதிலடி
ஓபிஎஸ் நேற்று இரவு வெளியிட்ட தனி அறிக்கையில், கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆம்புலன்ஸ்களில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இதனை விசாரித்து முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள்தான் ஆகின்றன. அதற்குள் அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்திருப்பது அக்கட்சி தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.