"மற்ற எந்த கட்சிக்கும் அடிபணியாமல்.." திடீரென காங்கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தி ட்வீட்! பெரிய விவாதம்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குச் சமீபத்தில் தான் புதிய மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரவீன் சக்கரவர்த்தி, மற்ற எந்தக் கட்சிகளுக்கும் அடிபணியாமல் சுயமரியாதையுடன் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என ட்வீட் செய்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் கவனம் செலுத்தி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்கள் நடந்து வருகிறது.

காங்கிரஸ்
இத்தனை காலம் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்று இருந்தது. திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றிகரமான ஒரு கூட்டணியாகவே இருந்து வந்துள்ளது. இருப்பினும், சில காலமாகக் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே திமுக உடனான கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். பொதுவெளியில் அவர்கள் கூறும் கருத்துகள் சர்ச்சையாகி வருகிறது.
விஜய் கூட்டணி ஆட்சிக்கு ரெடி எனக் கூறியிருக்கும் நிலையில், தவெக உடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸில் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
மாவட்டத் தலைவர்கள்
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மொத்தம் 71 மாவட்டங்களுக்கான தலைவர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில் செல்வப்பெருந்தைக்கு எதிரானவர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பிரவீன் சக்கரவர்த்தி
இதற்கிடையே புதிய தலைவர்களுக்கு ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் அக்கட்சியின் டேட்டா அனலிடிக்ஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து தெரிவித்திருந்தார். அத்தோடு மற்ற எந்தக் கட்சிகளுக்கும் அடிபணியாமல் சுயமரியாதையுடன் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என ட்வீட் செய்துள்ளது பேசுபொருள் ஆகியுள்ளது.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.. மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும்! வாழ்த்துகள்!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
விவாதம்
அவரது இந்தப் பதிவு இப்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதே பிரவீன் சக்கரவர்த்தி தான் கடந்த மாதம் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்திருந்தார். அது அப்போதே அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. அவரது இந்தச் சந்திப்புக்கு பிறகே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருந்தது அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications