முதலும் முடிவும்! ஜனாதிபதி தேர்தலில் நடந்த சுவாரசியம்! முதல்வர் ஸ்டாலின் - ஓபிஎஸ் இடையே ஒரு ஒற்றுமை?
சென்னை : தமிழகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் நபராக வாக்களித்தார் இன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கடைசி நபராக வாக்களித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அப்பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!
ஆளும் கட்சியான பாஜக தனது தரப்பில் திரெளபதி முர்முவையும், எதிர்க்கட்சிகள் தங்கள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் சில சுவாரசிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குடியரசு தலைவர் தேர்தல்
இந்நிலையில் தமிழகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் திமுக அதிமுக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். கொரோனா அறிகுறி காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வரும் ஓபிஎஸ் தன்னுடைய வாக்கினை செலுத்துவதற்காக இன்று மதியம் 2 மணி அளவில் தலைமை செயலகம் வந்தார்.
திடீர் சந்தேகம்
அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் உதவியாளர்கள் என அனைவரும் உள்ளே வந்துவிட்ட பின்னரும் அவருடைய வாகனம் மட்டும் தலைமைச் செயலக வாயிற் கதவிற்கு நுழைவாயிலுக்கு 100 மீட்டர் முன்னாலே நிறுத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வருவதால் நேரடியாக வாக்குப்பதிவு மையத்திற்கு வரலாமா அல்லது பிபிஇ கிட் அணிந்து வர வேண்டுமா என திடீர் சந்தேகம் வந்ததால் வாகனத்தை தலைமை செயலகத்திற்கு வெளியிலேயே நிறுத்திவிட்டு தொலைபேசி வாயிலாக தகவல் கேட்டனர்.
மீண்டும் மருத்துவமனை
அவருடைய ஆதரவாளர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் வானதி ஸ்ரீனிவாசன் உதவியோடு அங்கிருந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சந்தேகங்கள் கேட்டனர். அவர் வாக்கு செலுத்தி விட்டு மீண்டும் மருத்துவமனை செல்ல இருக்கிறார் இந்த நிலையில் பிபிஇ கிட் அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் வந்து வாக்களிப்பது தான் சரியாக இருக்கும் எனவே அவரை 4 மணிக்கு வரச் சொல்லுங்கள் என அதிகாரிகள் கூறியதால் ஓபிஎஸ் தலைமை செயலகத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றார்.
ஸ்டாலின் - ஓபிஎஸ்
அதன் பிறகு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒதுக்கப்பட்டிருந்த கடைசி ஒரு மணி நேரமான 4 மணிக்கு வந்து ஓபிஎஸ் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் ஒரு சுவாரசியமும் இருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் முதல் நபராக வாக்களித்தார் இன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கடைசி நபராக வாக்களித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இருவருமே மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து வாக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நாசர்
இதேபோல் தமிழக பால்வளத்துறை அமைச்சரான நாசரும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று நடந்த வாக்குப்பதிவில் அவர் கலந்து கொண்டு வாக்களித்தார். அவரும் ஓபிஎஸ் போலவே பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வாக்களித்தவர்கள் போலவே தேர்தல் அதிகாரிகளும் பிபிஇ கிட் அணிந்திருந்தார்கள்.