பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு- தமிழகத்திலும் அமல்படுத்த முற்போக்கு பிராமண சங்கம் கோரிக்கை
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் என்று முற்போக்கு பிராமண சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக முற்போக்கு பிராமண சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தி வருகிறோம். இந்தியாவின் மற்ற அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஏற்கனவே இந்த 10% இட ஒதுக்கீட்டை செயல்படுத்தியுள்ளன.
தமிழகத்திலும் இதனை செயல்படுத்த வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்திவருகிறோம். சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர்த்து அரசால் உதவி செய்யப்படுகிற அல்லது உதவி செய்யப்படாத தனியார் நிறுவனங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களில் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கு நமது அரசியல் அமைப்பு சட்டம் அதிகபட்சமாக 10% இட ஒதுக்கீட்டை மாநிலத்தின் கீழ் சேவைகளில் ஆரம்ப நியமனம் செய்யப்படும் பதவிகளில் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் வழங்குகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் இந்த இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படவில்லை. மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான சான்றிதழையும் தமிழக அரசு வழங்குவதில்லை.
இந்த கல்வியாண்டு முதல் தமிழக அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்தில் வேலைகளுக்கான E.W.S ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசாங்க உத்தரவை(G.O) வெளியிடுமாறும் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகளை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மாநில அரசிடம் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்டு அமல்படுத்தாத பட்சத்தில் நீதிமன்றத்தை அணுக முடிவுசெய்துள்ள்ளோம். இவ்வாறு முற்போக்கு பிராமண சங்கம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications