கம்ப்யூட்டர் சயின்ஸை அரசுப் பள்ளியில் அறிமுகம் செய்த பேராசிரியர் அன்பழகன்! மறக்க முடியாத திட்டங்கள்!
சென்னை: பேராசிரியர் அன்பழகன் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் அவர் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை.
அரசுப் பள்ளிகளில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது முதல் உயர்கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது வரை அவர் முன்னெடுத்து செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம்.
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா காணும் இவ்வேளையில் அவர் ஆற்றிய பணிகள் குறித்த விவரம் வருமாறு;

ஐந்து மதிப்பெண்கள்
*1990-91 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் சேரும் கிராமப்புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
*1996 - 2000 காலகட்டத்தில் 965 தொடக்கப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்தன. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவரது உயர் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொண்டது.

கணினிப் பாடம்
*666 பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு அடைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு அப்போதுதான் அடித்தளமிடப்பட்டது.
*1996-2000 வரையான காலகட்டத்தில் 6 முதல் 14 வயதுள்ள 27,000 குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர்.
*ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை எளிய மாணவரது அடிப்படைக் கல்வி வளர்ச்சிச் சொல்லிக்கொள்ளும்படி இருந்தது.

உயர்கல்வித்துறை
*100 கிராமப்புற மாணவருக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது.
*1997 ஆம் ஆண்டில் தான் உயர்கல்வித்துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98ல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

பெரியார் பல்கலைக் கழகம்
*17.09.1997 அன்று பெரியார் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து தொழில்கல்வியில் சேர்ந்த முதல் 10 நிலை மாணவர்களின் உயர்கல்விச் செலவை அரசு ஏற்றுக்கொண்டது.
*உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய டாக்டர் கலைஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் செயல்தலைவராக தமிழண்ணல் நியமிக்கப்பட்டார்.
இவையெல்லாம் பேராசிரியர் க.அன்பழகன் தமிழக அரசின் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில மட்டுமே ஆகும்.












Click it and Unblock the Notifications