இப்போ கஞ்சா பூ கண்ணால.. அடுத்து அபின், கொக்கைனா? விருமன் படத்துக்கு எதிராக பொங்கிய அமக ராஜேஸ்வரி!
சென்னை : கார்த்தி - அதிதி நடித்த 'விருமன்' படம் வெளியாகி இருக்கும் நிலையில், கஞ்சாப் பூ எனப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான் என அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் முத்தையாவும் நடிகர் கார்த்தியும் இணைந்து உருவாக்கியுள்ள விருமன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இரண்டு நாட்களில் படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் படத்தில் இடம்பெற்ற 'கஞ்சா பூ கண்ணால' என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த பாடலை யூட்யூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
கஞ்சாப் பூ
இந்நிலையில் கஞ்சாப் பூ எனப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான் என அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா என்பவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது.
போதைப்பொருள்
அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும். கஞ்சாப் பூ எனப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான். ஏற்கனவே "கஞ்சா வெச்ச கண்" எனப் பாடல் வெளியாகி உள்ளது.அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது.
சிந்திக்க வேண்டும்
இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன், அபின்,... இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும். எதை ஒழிக்க வேண்டுமோ அதன் பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.திரைப்படத் துறையினர் மக்கள் நலன் குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.
தவிர்க்க வேண்டும்
அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும். நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கலைத்துறையை நேசிப்பவள் நான் ஆனால் சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம்" என கூறியுள்ளார்.