சட்டப்பேரவை வரலாற்றில் அதிசயம்.. நேற்று நடந்த ஆரோக்கியமான நடைமுறை.. சுமூகமாக நடந்த விவாதம்
சென்னை: சட்டசபையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் இருக்கை அருகே (செவ்வாய்கிழமை) வந்து பேசினார். சட்டப்பேரவை வரலாற்றில் ஆரோக்கியமான நடைமுறையாக இது பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் சட்டசபையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில், முனுசாமி பேசுகை யில், ''தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்; டீசல் 4 ரூபாய் குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், பெட்ரோல் விலை 3 ரூபாய் தான் குறைக்கப்பட்டது,'' என்றார்.
இதற்கு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ''2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருமுறை கூட குறைக்கப்படவில்லை,'' என்றார். தொடர்ந்து பேசுகையில், ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அந்த வார்த்தையை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் கேட்டார்கள் அப்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நிதி அமைச்சர் தியாகராஜனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில், ஒரு கருத்தை கூறினார்.

பிடிஆர் பதிலுக்கு ஸ்டாலின் விளக்கம்
மீண்டும் எழுந்த பழனிவேல் தியாகராஜன், ''தனிநபரை பற்றி நான் கூறவில்லை. திசைதிருப்பும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். யாரையும் நான் அவமதிக்கவில்லை,'' என்றார். அப்போது எழுந்த முதல்வர் ஸ்டாலின், ''நிதி அமைச்சர் விளக்கம் சொல்லும் போது, 'அதை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது' என கேட்டிருக்க வேண்டும். ''அவர் வார்த்தையை மாற்றி கூறியதற்கு, உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.

வார்த்தைகள் நீக்கம்
மீண்டும் எழுந்த நிதி அமைச்சர் பழனிவேல்ய தியாகராஜன், ''எதிர்க்கட்சி தலைவர் என்னை பற்றி பேசலாமா,'' எனகேட்டார். இதையடுத்து, நிதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு உடனே அறிவித்தார்.

தேடி வந்த பிடிஆர்
அதன்படி இருவரும் பேசிய சில வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முன்னதாக 9.55 மணிக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பேரவைக்குள் அதிமுக உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்த இடத்துக்கு வந்தார். அங்கிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர். அவர்களிடமும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர் இருக்கைக்கு சென்றார்.

மனம் விட்டு பேசினர்
இருவரும் பரஸ்பரம் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை பற்றி மனம் விட்டு பேசியதாக கூறப்படுகிறது. என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் இல்லை. அதிமுக உறுப்பினர்கள் சமாதனம் அடைந்ததால் நேற்று அவை சுமூகமாக நடந்தது.

ஆச்சர்யம்
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஆளுங்கட்சி அமைச்சரும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும் பேரவைக்குள் இதுபோன்று பேசிக் கொண்டது கிடையாது. பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சந்தித்தால் பேசிக்கொள்வதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால், நேற்று பிடிஆர் மற்றும் முனுசாமி சந்தித்த சம்பவம் முற்றிலும் புதிய, அதே நேரம் ஆரோக்கியமான நடைமுறையாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications