மெரினா உள்பட சென்னை கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை.. இவங்களுக்கு மட்டும் விதிவிலக்கு
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 20,000-க்கும் மேல் சென்ற நிலையில் தினசரி பாதிப்பு 700 என்ற நிலைக்கு கொரோனா வந்தது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. அரசுக்கு மக்களும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். தற்போது இந்தியாவில் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தமிழகத்துக்கும் ஓமிக்ரான் புகுந்தது.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
இது போதாதென்று தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 1,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று 1,489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது கவலைக்குரிய அம்சமாக உள்ளது.

சென்னை நிலை மோசம்
சென்னையில் இன்று மட்டும் 682 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களில் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது. இங்கு கொரோனா கட்டுப்பாடு பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் நேற்று சென்னை மக்கள் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடை விதித்தனர். மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் நேற்று செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.

பொதுமக்கள் செல்ல தடை
இந்த நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மறு உத்தரவு வரும்வரை பொதுமக்கள் கடற்கரை களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மட்டும் அனுமதி
அதே வேளையில் பொதுமக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு நடைப்பயிற்சி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கடற்கரைகளின் மணற்பரப்பில் செல்ல அனுமதி இல்லை.
ஆனால் பிரத்யேக நடைபாதையில் கடற்கரைக்கு செல்ல மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுளளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications