10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு உறுதி.. விரைவில் அட்டவணை ரிலீஸ்- செங்கோட்டைன்
சென்னை: நடப்பு கல்வியாண்டில், பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஒரு சில கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கல்வி ஆண்டில், பள்ளிகளுக்கு பூஜியம் கல்வி ஆண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
ஏற்கனவே கொரோனா நோய் பரவல் காரணமாக 2020ம் ஆண்டுக்கான 10 மற்றும் 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஜூன் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

செங்கோட்டையன் பேட்டி
வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே வரும் 2021ம் ஆண்டு. 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஒரு பேட்டி அளித்தார். அதில் அவர், நடப்பு ஆண்டில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

தேர்வு கால அட்டவணை
முதல்வருடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை விரைவில் வெளியிடுவோம். பூஜ்யம் கல்வி ஆண்டாக இந்த கல்வி ஆண்டை அறிவிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்துள்ளார்.

அவசரம் இல்லை
அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறந்து விட்டு பிறகு உடனடியாக மூடியுள்ளனர். கொரோனா நோய் பரவல் காரணமாக அவ்வாறு மூடப்பட்டுள்ளது. எனவேதான், பள்ளிகள் திறக்கும் விஷயத்தில் நாங்கள் அவசரப்படவில்லை. இவ்வாறு செங்கோட்டையன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

இங்கிலாந்து கொரோனா
இங்கிலாந்து நாட்டில் உரு மாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கிருந்து இந்தியா வந்தவர்கள் மூலமாக அந்த வகை வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சம் இருக்கிறது. அந்த வகை வைரஸ் பரவினால் கொரோனா இரண்டாவது அலைவீசக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பு கொண்ட 12 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செயப்பட்டது.

செங்கோட்டையன் அதிரடி
இது உருமாறிய கொரோனா வைரசோ என்பதை உறுதிப்படுத்துவதற்காக, புனே ஆய்வகத்திற்கு அவர்களின் ரத்த மாதிரிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொதுத் தேர்வுகள் பற்றி அமைச்சர் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தடுப்பூசிகள் பரவலான பிறகு, கொரோனா நோயின் பரவல் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைச்சர் இவ்வாறு கூறியிருக்க கூடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications