விருது வழங்கும் நிகழ்வுக்கு சிம்பு தாமதமாக வர இது தான் காரணம்! காத்திருந்து புறப்பட்ட அமைச்சர் !
சென்னை: சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் சிம்பு தாமதமாக வந்ததற்கு, அவருக்கு ஏற்கனவே இருந்த பிக்பாஸ் படப்பிடிப்பு தான் காரணமாக கூறப்படுகிறது.
இதனிடையே வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் ஒரு கட்டத்தில், சிம்புவுக்காக காத்திருக்க முடியாமல் தனக்கிருந்த அடுத்த பணிகள் காரணமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
சிம்பு வருகை குறித்த மேடையில் அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கும் போதே விழாவில் கலந்துகொண்ட புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணனும் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.

விருது விழா
சென்னையில் கடந்த சனிக்கிழமை மாலை தனியார் அமைப்பு சார்பில் திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் சிம்புவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்ட நிலையில், அதனை பெற்றுக்கொள்வதற்காக அவர் வருகை தந்த விதம் தான் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாலை 6 மணிக்கு சிம்பு விழா அரங்கிற்குள் வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவு 8.45 மணிக்கு தான் அங்கு சென்றாராம் சிம்பு.

புறப்பட்டு சென்றனர்
இதனால் அவருக்கு விருது கொடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் உட்பட பல முக்கியத் தொழிலதிபர்களும், ஒரு கட்டத்தில் விழா அரங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர் விஷ்ணுபிரபு, எஸ்,ஜே.சூர்யா, தம்பி ராமையா, ஹரீஷ் கல்யான் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மட்டும் சிம்புவுக்காக முழுமையாக காத்திருந்தனர். இதனிடையே போக்குவரத்து நெரிசல் தான் தாமதத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் கலைந்தது
இதனிடையே இந்த விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் ஒருவர் நம்மிடம் இது குறித்து கூறியதாவது, '' விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாலை 5 மணி முதலே ஏராளமான பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். எனது கணிப்புப்படி 700 பேர் வரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கக் கூடும். ஆனால் இதில் விஷேஷம் என்னவென்றால் சிம்பு வருகை மிகவும் தாமதமானதால் 8 மணிக்கு மேல் கூட்டம் லேசாக கலையத் தொடங்கியது.''

தர்ம சங்கடம்
''சிம்பு வருகை குறித்து அவ்வப்போது மேடையில் அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்த நிலையில், இறுதியாக அவர் வருகை தந்த போது இரவு 8.45 மணி இருக்கும். அப்போது அங்கு பார்வையாளர்களிடம் மாலையில் இருந்த உற்சாகம் குறைந்திருந்தது. இயக்குநர் கங்கை அமரன், விஐடி வேந்தர் விஸ்வநாதன், புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன், சென்னையின் முக்கிய தொழிலதிபர்கள் பலர் விழாவிலிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றுவிட்டனர்'' எனக் கூறினார்.

விளக்கம்
இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்ட தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் செல்வக்குமார், சிம்புவுக்கு பிக்பாஸ் படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துக் கொண்டுதான் விருது நிகழ்ச்சிக்கு வரமுடியும் என ஏற்கனவே கூறியிருந்ததாகவும் அவர் வேண்டுமென்றே தாமதமாக வரவில்லை எனவும் விளக்கம் அளித்தார்.












Click it and Unblock the Notifications