காமராஜர் முன்னிலையில் சென்னையில் இளவரசர் ஆண்ட்ரூ முதல் பிறந்த நாளை கொண்டாடிய 2-ம் எலிசபெத் மகாராணி!
சென்னை: பிரிட்டனின் மகாராணி இன்று காலமான இரண்டாம் எலிசபெத் 1961-ம் ஆண்டு சென்னையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் முன்னிலையில் மகன் ஆண்ட்ரூவின் முதல் பிறந்த நாளை கொண்டாடியது சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளது.
பிரிட்டனின் மகாராணியாக 70 ஆண்டுகள் ஆட்சி செய்து 96 வயதில் இன்று காலமானார். இங்கிலாந்து உட்பட 14 நாடுகளின் அரசியாக திகழ்ந்தவர். உலகில் மிக நீண்டகாலம் ஆட்சி செய்த பெருமைக்குரியவர் 2-ம் எலிசபெத்.
இரண்டாம் எலிசபெத் மகாராணி, 1961-ம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போதைய பம்பாய் (இன்று மும்பை), ஆக்ரா, ஜெய்ப்பூர் என பல நகரங்களுக்கும் பார்வையிட்ட அவர் சென்னை மாநகருக்கும் வருகை தந்தார்.
சென்னையில் அப்போது முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரை சந்தித்தார் எலிசபெத் மகாராணி. அவரது சென்னை வருகையின் போது ஒரு சுவாரசிய நிகழ்வும் நடைபெற்றது. அதாவது 2-ம் எலிசபெத் மகாராணியின் மகன் ஆண்ட்ரூவின் முதல் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார் எலிசபெத் மகாராணி.
சென்னை ராஜாஜி அரங்கில் ஆண்ட்ரூவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு 1961-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான கேக் சென்னையின் புகழ் பெற்ற Bosotto Bros பேக்கரியில் தயாரிக்கப்பட்டது. இதற்கு ஆர்டர் கொடுத்தவர் முதல்வராக இருந்த காமராஜர்தான். பேக்கரியின் உரிமையாளராக எம்.சுப்பிரமணியத்தை அழைத்து கேக் ஆர்டர் செய்ய கொடுத்தார் காமராஜர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை அண்ணாசாலையில் இந்த பேக்கரியின் தலைமையகம் இருந்தது. செல்வந்தர்கள் விரும்பி செல்லும் இடங்களில் ஒன்றாக இருந்தது. காலமாற்றத்தில் சென்னை அண்ணாசாலையில் இருந்து இந்த பேக்கரி இடம்பெயர்ந்தது.
ராஜாஜி அரங்கத்தில் ஆண்ட்ரூவின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் முதல்வராக இருந்த காமராஜரும் பங்கேற்றார். இந்நிகழ்வில் Bosotto Bros பேக்கரியின் கேக்கை வெட்டி இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ஊட்டி மகிழ்ந்தார் எலிசபெத் மகாராணி. இது தவிர பேச்சுவழக்கிலான ஒரு சம்பவமாக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய பயணம் குறித்து பேசுகையில் காமராஜர் குறித்த் நெகிழ்வாக பதிவு செய்தார் இரண்டாம் எலிசபெத் என்றும் சொல்லப்படுவது உண்டு.
டயானா இல்லையே! எலிசபெத் மரணம்.. 8 பேரன், பேத்தி! 12 கொள்ளு பேரன் பேத்தி! யுகேவின் அடுத்த ராணி யார்?