ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது.. உச்சநீதிமன்ற உத்தரவால் ரிசல்ட் வெளியாகவில்லை
Recommended Video
சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம். அப்பாவு, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ். இன்பதுரை போட்டியிட்டனர்.
இன்பதுரை 69590 வாக்குகளையும், அப்பாவு 69541 வாக்குகளையும் பெற்றனர். அதிமுகவேட்பாளர் இன்பதுரை, அப்பாவுவைவிட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வாக்குகள் நிராகரிப்பு
இதையடுத்து, ராதாபுரம் தொகுதியில் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அப்பாவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாதிடுகையில், வாக்கு எண்ணிக்கையின்போது, தபால் மூலம் வந்த வாக்குகளில் 300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. அதில் 203 வாக்குகளுக்கு தலைமை ஆசிரியர்கள் சான்றளித்திருந்ததால், அதையே காரணமாக சொல்லி, அவை நிராகரிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் தபால் வாக்குகளுக்குச் சான்றளிக்கலாம் என விதிகள் உள்ளன. எனவே அந்த வாக்குகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று அப்பாவு தரப்பில் வாதிடப்பட்டது.
203 தபால் வாக்குகள்
இதனிடையே இன்பதுரை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.வி.ராமானுஜம், இன்பத்துரை வெற்றி சரியான விதிகளின் படிதான் அறிவிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தேர்தலில் பதிவான தபால் வாக்குகளில் 203 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது விதிகளுக்கு முரணானது. ஆகவே 19, 20, 21ம் சுற்று வாக்கு எண்ணிக்கைக்கான மின்னணு வாக்கு எந்திரங்களையும், 203 தபால் வாக்குகளையும் வரும் 4ம் தேதி காலை 11.30மணிக்குள் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம், உத்தரவு பிறப்பித்தது.
கடைசி மூன்று சுற்று ஓட்டு
அதேநேரம், மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடாது என்று, இன்பதுரை சார்பில் அன்றைய தினம் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் பதில் தாக்கல் செய்ய அப்பாவுவிற்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பாவு தரப்பில், வாக்குகள் எண்ணுவதில் பல்வேறு முறைக்கேடுகள் நடந்துள்ளதை கருத்தில் கொண்டே, நீதிமன்றம் மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளது என வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இன்பதுரை மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக்கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ராதாபுரத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு தடை கிடையாது. 203 தபால் ஓட்டுகள் மறுபடி எண்ணப்பட வேண்டும். கடைசி மூன்று சுற்று வாக்குகளையும் மறுபடி எண்ண வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
அப்பாவு நம்பிக்கை
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வாக்கு எந்திரங்கள் உயர் நீதிமன்றத்திற்கு நேற்றே பாதுகாப்புடன் திருநெல்வேலியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை ஐகோர்ட் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் உயர்நீதிமன்ற வளாகத்தில் எண்ணப்பட்டன. ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் கண்காணிப்பில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்பாவு மற்றும் இன்பதுரை ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்தனர். இதனிடையே, நிருபர்களிடம் பேசிய, அப்பாவு, 100 சதவீதம் தான் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
முடிவுகளை வெளியிட
மாலை 5 மணிக்கு வந்த நிலவரப்படி 1508 தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்தது. கடைசி மூன்று சுற்று மின்னணு வாக்கு எண்ணிக்கை அதாவது 19, 20, 21 ஆகிய சுற்று வாக்குகள் ஊழல் கண்காணிப்பு பதிவாளர் சாய் சரவணன் கண்காணிப்பில் எண்ணும் பணி அதையடுத்து துவங்கியது. மாலை சுமார் 6.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை அனைத்தும் நிறைவுற்றது. இன்பதுரையின் மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்தபோதிலும், முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே யார் வெற்றி பெற்றார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.